ரூ.10 கோடியை உதறிய ஹீரோயின்

நடிகை ஷில்பா ஷெட்டி சமீபத்தில் தனக்கு வந்த ரூ. 10 கோடி பணத்தை உதறிய நிகழ்வு நடந்துள்ளது. இவர் இந்தியில் மட்டுமல்ல தமிழில், மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்திருக்கிறார். விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். 30 வயதிலேயே சில நடிகைகள் வெயிட்டு போட்டு கொழுக்கட்டைபோல் குண்டாகிவிடுகின்றனர். 44 வயதாகியும் இன்னமும் ஸ்லிம் தோற்றம் மாறாமலிருக்கிறார் ஷில்பா. யோகா, உடற்பயிற்சி, முறையான உணவு பழக்கம், இந்த ஒழுக்கம்தான் அவரை ஸ்லிம்மாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.

இணைய தளத்தில் இதற்காக டிப்ஸ் தருவதுடன் யோகா மாஸ்டராக பலருக்கு பயிற்சியும் அளிக்கிறார். சமீபத்தில் ஷில்பாவை அணுகிய ஆயுர்வேத நிறுவனம் ஒன்று, ‘நீங்கள் ஸ்லிம்மாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு எங்களின் ஆயர்வேத மாத்திரைகள் தான் காரணம் என்று ஒரு விளம்பரம் நடித்துக்கொடுங்கள் சம்பளமாக ரூ 10 கோடி தருகிறோம்’ என்றனர். அதை உடனடியாக ஷில்பா மறுத்துவிட்டார்.

இதுபற்றி அவர் கூறும்போது,’இதுபோன்ற மாத்திரைகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஒல்லியாகவும், ஆரோக்கயமாகவும் இருப்பதற்கு ஒரே மாற்றுவழி வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள்வது தான். ஒல்லியாவதற்கு மாத்திரை சாப்பிடுவது, உணவை உண்ண மறுப்பது உடனடி பலனை தரலாம் ஆனால் நிரந்தரம் கிடையாது. சரியான உணவை உண்பதும், உடற்பயிற்சியும் மட்டுமே நீண்ட நாள் பலன் தரும். பல்துலக்குவதற்கும். உணவு உண்பதற்கும் நாம் விடுமுறை தருகிறோமா? இல்லையே. அப்படியிருக்கும்போது உடற்பயிற்சி செய்வதற்கு மட்டும் ஏன் விடுமுறை தர வேண்டும்’ என்றார் ஷில்பா.

Related Stories: