சாஸ்தாவின் ஆறுபடை வீடுகள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலையணிந்து விரதம் இருந்து வரும் அனைத்து ஐயப்ப மார்களும்  தர்ம சாஸ்தாவான ஐயப்பன் குடிகொண்டு அருள்பாலிக்கும் கீழ்க்கண்ட ஆறுபடை  ஆலயங்களுக்கும்  சென்று வழிபட்டால்  புனித யாத்திரை சென்றதன்   பலன் மேலும் முழு பயனும்  கிடைக்கும். என்பதில் ஐயமில்லை.தமிழ் கடவுளான முருகனுக்கு எப்படி அறுபடைவீடுகள் புகழ்வாய்ந்தவையாக உள்ளனவோ , அது போன்று  சாஸ்தாவுக்கும் ஆறு ஆலயங்கள்  முக்கியமானவை ஆகும். இவை சாஸ்தாவின்  அறுபடை வீடுகளாக சொல்லப்படுகின்றன.

சாஸ்தாவின்  அறுபடை வீடுகளாக  ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம் மற்றும் சபரிமலை என ஆறு ஆலயங்கள்  ஆகும்.

ஆரியங்காவு

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முதலில் தரிசிக்க வேண்டிய ஆலயம்  ஆரியங்காவு  ஆகும் .ஐயப்பன்  மற்ற ஆலயங்களில் பிரம்மச்சாரியாகவே காட்சியளிப்பார். ஆனால், ஆரியங்காவு ஐயப்பன் ஆலயத்தில்  ஐயப்பன் சவுராஷ்ட்ர குலதேவியான புஷ்கலா தேவியுடன் அரச கோலத்தில் காட்சியளிக்கிறார் .செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

அச்சன்கோவில்

இவ்வாலயத்தில்  உள்ள ஐயப்பன் விக்ரகம் மிகப்பழமையானதாகும். இந்த ஆலயத்திற்கு  மற்றொரு சிறப்பும்  விஷேச சக்தி உண்டு. ஏதாவது விஷப்பூச்சிகள் தீண்டினால், ஐயப்பன் விக்ரகத்தின் மீது பூசப்பட்டுள்ள சந்தனத்தையும் மந்திரித்த தீர்த்தத்தையும் தருவார்கள். அவை தான் விஷக்கடிக்கு மருந்தாகும். உடலில் இருந்து  விஷம் முற்றிலும் இறங்கி உடல் பூரணமாக குணமடைந்துவிடுகிறது. ஐயப்பன் போருக்கு பயன்படுத்திய வாள் இங்கு  பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி தமிழக, கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ளது. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை சூழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது.

குளத்துப்புழா

ஒரு மனிதனின் வாழ்க்கையை ஐந்து பருவங்களாக பிரித்து சாஸ்திரங்கள் வகைப் படுத்தியுள்ளன.இதில் பால்ய பருவத்தை  விவரிக்கும் வகையிலேயே குளத்துப்புழா பாலகன் ஆலயம்  அமைந்துள்ளது.பாலகன் ரூபத்தில் சாஸ்தா இவ்வாலயத்தில் காட்சி அளிக்கிறார் .செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் இந்த தலம் அமைந்துள்ளது.

எருமேலி

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து ஐயப்ப பக்தர்களுக்கும் தவிர்க்கவே முடியாத ஒரு இடம் எதுவென்றால் அது எருமேலி தான். ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இங்கு வந்து வேடர்களைப் போல் வேஷமிட்டு பேட்டை துள்ளும் இடமாக உள்ளது. இங்கு  தான் ஐயப்பன் வேட்டைக்கு செல்லும் கோலத்தில் கையில் வில் மற்றும் அம்புகளை தாங்கியவாறு காட்சியளிக்கிறார்.

பந்தளம்

காட்டில் பாலகனாக கண்டெடுக்கப்பட்ட ஐயப்பன் மன்னரான ராஜசேகரனால் 12 வயது வரையிலும் பந்தளம் அரண்மனையில் வளர்க்கப்பட்டார். பந்தளம் அரண்மனை, சபரிமலையில் இருந்து சுமார் 88 கி.மீ தொலைவிலும், திருவனந்தபுரம் , கோட்டயம்  இரண்டும்  இணைக்கும் பாதையில் உள்ளது.

தர்மசாஸ்தாவாக விளங்கும் ஐயப்பன் துறவறம் மேற்கொண்டு, வில்லெடுத்து அம்பெய்தினார். அந்த அம்பு வந்து விழுந்த இடம் தான்   சபரிமலையாகும். அந்த இடத்தில் தான் 18 படிகளுடன் ஆலயம்  உருவாக்கப்பட்டு, கிழக்கு நோக்கி ஐயப்பன் விக்ரகம் பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது. அருகிலேயே மாளிகைப்புரத்து அம்மனுக்கும் தனி ஆலயமும்  உள்ளது. இங்கு தான் ஆண்டுதோறும் மகர ஜோதி தினத்தன்று ஐயப்பன் ஜோதி வடிவாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

தொகுப்பு: குடந்தை நடேசன்

Related Stories: