பேரறிவைப் பொழியும் சரஸ்வதி தலங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கூத்தனூர்

தமிழகத்தில் சரஸ்வதிக்கென்று அமைந்துள்ள பழம்பெரும் ஆலயம் கும்பகோணம் காரைக்கால் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் கூத்தனூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. ஹரிநாதேஸ்வரம் மற்றும் அம்பாள்புரி என்ற திருநாமத்துடன் விளங்கிய இவ்வூரை இரண்டாம் இராஜராஜன் தன் அவைக்களப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கினான். ஆதலால் இவ்வூர் கூத்தனுடைய ஊராகி ‘கூத்தனூர்’ ஆக மாறியதென்பர்.

புருஷோத்தமன் என்ற சிறுவன் பிறவியிலேயே ஊமையாக இருந்தான். அதனால் ஊரார் அவனைக் கேலி பேசினார். அச் சிறுவன் தினமும் ஹரிநதியில் நீராடி சரஸ் வதியை வணங்கி வந்தான். ஒருநாள் சகலகலா வல்லி அவன் முன்தோன்றினாள். அவனது வாயில் தான் தரித்திருந்த தாம்பூலத்தை அருளி நல்லாசிபுரிந்து மறைந்தாள். அது முதல் ஊமையாயிருந்த புருஷோத்தமன் கவிபாடும் ஆற்றலைப் பெற்றான். சரஸ்வதி மீது பல பாடல்களைப் பாடினான். அதனால் பாரதி என்ற பெயர் அவனுடைய பெயருடன் சேர்ந்து ‘புருஷோத்தம பாரதி’யானான். ( பாரதி - சரஸ்வதி).

பின்னாளில் ஒட்டக்கூத்தர் என்றழைக்கப்பட்ட புருஷோத்தம பாரதி, சோழ மன்னர்களாகப் பெருமையுடன் விளங்கிய விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன் ஆகிய மன்னர்களின் அரசவையில் அவைப்புலவராக பெருமையுடன் விளங்கினார்.கூத்தனூர் ஆலயம் சிறிய ஆலயமானாலும் மிகவும் புகழ்பெற்ற ஆலயம். இங்கு சரஸ்வதி தேவியே கருவறையில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். மேலும் திருச்சுற்று, முக மண்டபம், அர்த்த மண்டபம், அந்தராளம் ஆகியவை முறைப்படி கட்டப்பட்டுள்ளன. இத்திருக்கோயிலின் முக மண்டபத்தின் இடது பக்கத்தில் தேவியின் அருள் பெற்ற ஒட்டக்கூத்தர் வலக்கையில் எழுத்தாணியும் இடக்கையில் ஏடும் கொண்டு அமர்ந்திருக்கிறார்.

அர்த்த மண்டபத்தில் விநாயகர், லிங்கம், முருகப் பெருமான் ஆகியோர் காட்சி தருகின்றனர். பலிபீடத்தருகில் வலம்புரி விநாயகரும், திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் நர்த்தன கணபதியும் இடம் பெற்றுள்ளனர். கர்ப்ப கிரகத்தில் பிரம்ம தேவரின் துணைவியான ஸ்ரீசரஸ்வதி தேவி தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்து அருள் புரிகிறாள். தேவியின் திருக்கரங்களில், பின் இரு கரங்களில் ஜபமாலையும் கமண்டலமும் இடம் பெற்றிருக்க முன் இருகரங்களில் ஏடும். சின்முத்திரையும் இடம் பெற்றுள்ளன. ஜடா மகுடத்துடன் கூடிய இவளுக்கு மூன்று கண்கள் உண்டு. எல்லாவிதமான ஆபரணங்களுடன் அழகுடையவளாக புன்னகைப் பூக்கும் கருணைத் திருமுகத்துடன் தன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

நவராத்திரியில் ஒன்பது நாளும் இத்திருக்கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜையன்று கருவறையில் குடி கொண்டுள்ள சரஸ்வதி தேவியின் திருப்பாதங்கள் கருவறையின் வெளியிலுள்ள அர்த்த மண்டபம் வரை நீண்டிருக்குமாறு அலங்காரம் செய்யப்படுகிறாள். இதன்மூலம் தேவியின் திருப்பாதங்களுக்கு பக்தர்களே நேரடியாக அர்ச்சிக்க முடியும். இன்றும் இந்த மரபு கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சிருங்ககிரி சாரதை

பரந்து விரிந்த பாரத நாடெங்கும் தன் பாதம் படும்படியாக நடந்து ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்திய ஸ்ரீஆதிசங்கரர், திசைக்கு ஒன்றாக, நான்கு பீடங்களை நிறுவினார். கிழக்கே பூரி, மேற்கே துவாரகை, வடக்கே பத்ரி, தெற்கே சிருங்கேரி என அவர் அமைத்த நான்கு மடங் களில், முதலாவதாகத் திகழ்கிறது சிருங்கேரி.

அதென்ன சிருங்கேரி?

சிர்ங்க கிரி என்பதே சிருங்கேரி என்றானதாம். தசரதர் குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டியாகம் செய்தார். இந்த யாகத்தை நடத்திக் கொடுத்தவர், விபாந்தக முனிவரின் புதல்வரான ரிஷ்யசிருங்கர். அதாவது, ‘மான் கொம்பு உடையவர்’ என்று பொருள். இவர் வாழ்ந்த பகுதியே சிருங்கேரி. இந்த ரிஷ்யசிருங்கருக்கென்று ஒரு கோயிலும் சிருங்கேரி பகுதியில் உள்ளது. சிருங்கேரியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் ஒற்றையடி மலைப்பாதையில் சென்றால் இந்தக் கோயிலை அடையலாம். சிருங்கேரியில் இருந்து பேருந்து, ஜீப் வசதிகள் உள்ளன. மழைக் கடவுளாக இவர் வணங்கப்படுகிறார்.   

சாரதா தேவி சரஸ்வதியின் அவதாரமே. ஆசார்ய சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவளும், புலன்களை அடக்கி அவை மீண்டும் வெளிப்போகாமல் காக்கும் ஆற்றல் நிறைந்த துறவிகளால் வணங்கப்படுபவளும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய எல்லாப் பேறுகளையும் அளிப்பவளும், உலகைப் படைத்து, காத்து, லயம் செய்து கொள்ளும் சாவித்திரி தேவியும் பரமகுரு உருவில் எங்கும் உலவுபவளுமான சாரதாம்பிகைைய, சர்வாங்க சுந்தரியை, சிருங்கேரியில் உறையும் தாயை வணங்குகிறேன் என்று சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் சாரதாஷ்டகத்தில் கூறுகின்றார்.

ஆதிசங்கரர் சிருங்கேரியில் மடத்தை ஸ்தாபனம் செய்தது முதல் அங்கே சாரதையாக அமர்ந்து அனுக்கிரகித்து வருபவள் கலைவாணியே தான். ஸ்ரீசாரதா தேவி சர்வாலங்கார பூஷிதையாக இடது காலை மடித்து வலது காலைத் தொங்க விட்டு நான்கு கரங்களுடன் அழகும் அருளும் கூடிய சாந்த தேவியாகக் காட்சி தருகிறாள். சரஸ்வதியின் அவதாரமாதலால் ஓலைச் சுவடி ஒரு கரத்தில்; ஒரு கரம் அபயஹஸ்தம்; ஒரு கரத்தில் கிளி; மற்றொன்றில் கலசம் வித்தையின் இருப்பிடம் இப்பீடம். ஸ்ரீசக்ரத்தில் அம்பிகை வீற்றிருக்கிறாள். வியாக்யான பீடத்தில் உத்ஸவ விக்கிரகம் தங்கத்திலானது. சந்தன மரத்திலானதை வித்யாரண்யர் தங்கத்தில் செய்தார். வித்யாரண்யர் ஆலயத்தில் சரஸ்வதிக்கு தனி சந்நதி உண்டு.

சிருங்கேரி சாரதாம்பிகைக்கு நவராத்திரியில் விசேஷ அலங்காரம் உண்டு. புவனேஸ்வரி என்ற கருத்தைக் காட்ட இவள் பிரசவித்த பெண் போல கட்டிலிலும், அருகில் குழந்தையுடன், கைவிரல் மடிப்பில் வெற்றிலை, பாக்கும் பிரசவித்த மாது போன்ற காட்சியை அளிக்கிறாள் அம்பிகை. சுக்கு வெல்லம் தான் அன்றைய பிரசாதம். சிருங்கேரி பெரியவர்கள் தர்பாரின்போது அணியும் கிரீடம் ஸ்ரீசாரதாதேவியின் பாதங்களாக கருதப்படுகிறது.

ஆதிசங்கரர் பாறையின் மீது வரைந்த ஸ்ரீசக்ரத்தில் அம்பிகை அருளாட்சி செய்கிறாள். சாரதை நடுநாயகமாக விளங்கும் இத்திருக்கோயிலில் நான்கு திசைகளிலும் வாயில்கள் உள்ளன. இங்குள்ள தூண்களில் நான்கு அரிய சிற்பங்கள் உள்ளன. பதினெட்டுக் கரங்களை உடைய மகிஷாசுர மர்த்தினி, ராஜராஜேஸ்வரி, மகேஸ்வரி, ஜபமாலை, பத்மம், அபயவரதம் உடைய தேவி அவை. சாரதை சந்நதியின் வாயிலில் இரண்டு துவாரபாலகிகள் கம்பீரமாக நிற்கின்றனர். இங்கு கணேசரும், புவனேஸ்வரியும் தனித்தனி சந்நதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். கோயிலின் மேற்குப் பிராகாரத்தில் பத்துக் கரங்களுடன் சக்தி கணபதி அருள்புரிகிறார்.

சாரதை தட்சிணாமூர்த்தியாகத் திகழ்கிறாள். இவள் சனகாதியரால் வழிபடப் படும் தட்சிணாமூர்த்தி வடிவினள். சிவஞானத்தை அருள்பவள் என்ற பொருள்களில் முறையே, தட்சிணாமூர்த்தி ரூபிணி, சனகாதி, சமாராத்யா, சிவஞான ப்ரதாயினி என்ற நாமங்கள் ஸ்ரீலலித சகஸ்ரநாமத்தில் உள்ளன. சாரதை ஜபமாலை, சின்முத்திரை, அமுதகலசம் தாங்கி தட்சிணாமூர்த்தியாகத் திகழ்கிறாள். வெண்மை நிறத்துடன் சடையில் சந்திரனைத் தரித்து நான்கு கரங்களுடன் விளங்குபவர் தட்சிணாமூர்த்தி. இவர் ஜபமாலை, சின்முத்திரை, அமுத கலசம், சுவடி ஆகியவற்றைத் தன் திருக்கரங்களில் தாங்குகிறார். தட்சிணாமூர்த்தியின் பெண்வடிவம் சாரதை என்பதை அவள் தாங்கும் ஜபமாலை, சின்முத்திரை, அமுத கலசம், சுவடி ஆகியவை உணர்த்துகின்றன.

ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமத்தில் சாரதாராத்யா என்று ஒரு நாமம். சாரம் என்றால் ஞானம் அல்லது பேரறிவு என்று பொருள். ஞானத்தின் வடிவமாக ஞானத்தை அருள்பவளாக விளங்கும் சரஸ்வதியை சாரதை என்றனர். சாரதா நவராத்திரியில் சிறப்பாக வழிபடப்படுபவள். பரம ஞானிகளான மகான்கள் இவளை வழிபடுகின்றனர்.

பத்மநாபபுரம்

கம்பர் தமிழ்நாட்டிலிருந்து தென்பகுதிக்கு வந்தபோது தான் வணங்கி சரஸ்வதி தேவியின் திருவுருவையும் தன்னுடன் எடுத்து வந்து விட்டார். அச்சிலையே இன்று பத்மநாபபுரம் கோட்டையின் உள்ளே நிறுவப்பட்டுள்ளது. பத்மாசனத்தில் காட்சி தரும் இப்பெருமாட்டி நவராத்திரி உற்சவத்தின் போது திருவனந்தபுரம் எழுந்தருளுகிறார். அவ்வாறு எழுந்தருள வரும்போது அன்னையை தமிழக கேரள எல்லையில் இரு மாகாணமக்களும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

தஞ்சாவூர் - கங்கைகொண்ட சோழபுரம்

தஞ்சைப் பெரிய கோயிலிலும் கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயிலும் மூர்த்தங்கள் ஒரே மாதிரியாகவே அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் இரு திருக்கோயில்களிலும் சரஸ்வதி தேவி வீற்றிருக்கிறாள். கங்கை கொண்ட சோழபுரத்தில் வடக்குக் கோயிலின் மாடத்தில் மேற்கு நோக்கிய நிலையில் நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் நிலையில் ஞான சரஸ்வதியாக எழுந்தருளியிருக்கிறாள்.

தன் மேற்கரங்களில் ஜபமாலையும், நீர் கரத்தையும் ஏந்தியுள்ளாள். நாம் ஞானம் பெறுவது முக்தி மார்க்கத்தை அறிந்து அதன்படி நடந்து முக்தி பெறுதலேயாகும். முக்தி ஞானம் அடைந்தவனுக்கு இறைவன் ஒருவனே என்பது புலனாகும். அந்த இறைவன் ஒன்றே மேலானவன் என்பதனைக் குறிப்பதே சூசி முத்திரையாகும். ஞான நூல்கள் 14 என்ற எண்ணிக்கையில் சொல்வது பழக்கம். இதை உணர்த்தவே இங்குள்ள சரஸ்வதி 14 இதழ் தாமரையில் முனிவர்கள் புடை சூழ அமர்ந்துள்ளாள். சரஸ்வதி கைகளில் வீணை இல்லாமலா! ஆம்!  வீணை இல்லா சரஸ்வதி தேவி யோகத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் காட்சி தருகின்றாள்.

தஞ்சை பிரஹதீஸ்வரர் திருக்கோயிலின் தென்புற வாயிலில் மேற்திசை நோக்கிய நிலையில் இரு திருக்கரங்களுடன் தேவிவீற்றிருக்கிறாள். தேவியின் பின்னால் வெண் சாமரம் வீசும் பெண்கள் பின்னால் நின்றவாறு அமைக்கப்பட்டுள்ளனர். இங்கு கோயில் கொண்டிருக்கும் அம்பிகையின் சிற்பத் திருமேனி பார்ப்பவர் சிந்தையைக் கவரும். பத்மாசனத்தில் அமர்ந்து தவக் கோலத்தில் காட்சி தருகிறாள். இவளே ஞான சரஸ்வதி.

ராமேஸ்வரம் வீணா சரஸ்வதி

ராமேஸ்வரத்தில் உள்ள பல தீர்த்தங்களில் காயத்ரி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகியவையும் அடக்கம். இத்திருக்கோயிலின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் அமைந்துள்ளன. பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ஒரு தீவாகும். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இத்திருக்கோயிலில் பத்ர பீடத்தில் சுகாசனத்தில் சதுர் புஜங்களுடன் சரஸ்வதி அமர்ந்திருக்கிறாள்.  பின் கரங்களில் அட்சமாலை, சுவடி முன் கரங்களில் வீணையை ஏந்தியபடி காட்சி தருகிறாள். ஸர்வாலங்கார பூக்ஷிதையாக காட்சி தரும் சரஸ்வதியின் திருவுருவை கண்டு தரிசித்து அவள் அருள்பெறுவோம்.

காஞ்சிபுரம்

முக்தி தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பழம்பெரும் திருக்கோயில்களில் ஒன்று கச்சபேஸ்வரர் திருக்கோயில். இங்கு சியாமளா தேவி தனி சந்நதி கொண்டு விளங்குகிறாள். சரஸ்வதி சிவனை வழிபட்டு அருள்பெற்ற தலம் இதுவாகும். இவள் தன் திருக்கரங்களில் வீணை, கிளி, பாசம், அங்குசம், குயில், தாமரை, நீலோத்பலம், மலரம்பு, கரும்புவில் ஆகியவற்றை ஏந்திய நிலையில் காட்சி தருகிறாள். காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலிலும் மஹா சரஸ்வதி தன் சந்நதி கொண்டு அருள்புரிகிறாள்.

திருக்கண்டியூர்

அட்ட வீரட்டானத் திருத்தலங்களில் ஒன்றான கண்டியூர் சிவதலம் பாடல் பெற்ற திருத்தலமாகும். திருவையாறு தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இத்தலத்தில் தான் பிரம்மதேவனின் ஐந்தாவது தலை கொய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக இத்தல ஈசர் பிரம்ம சிரக்கண்டீசர் என்று அழைக்கப்படுகிறார். மூலவருக்கு பக்கத்தில் பிரம்ம தேவனும் சரஸ்வதி தேவியும் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளனர். இங்குள்ள பிரம்மதேவர் தாமரை. ஜபமாலை ஏந்தியும் அவருடைய வலப்புறம் அமர்ந்துள்ள சரஸ்வதி தேவி சர்வாலங்கார பூஷிதையாகக் காட்சி தருகிறாள்.

தொகுப்பு: ரஞ்சனா பாலசுப்ரமணியன்

Related Stories: