மிளகாயைத் துவையலாக அரைத்து வழிபடும் மாசாணியம்மன் கோவில்

கோவை மண்டலத்தின் அம்மன் கோயில்களில் பலராலும் அறியப்பட்ட கோயிலாக மாசாணியம்மன் கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த திருக்கோயிலானது மயான மண்ணில் அமைந்திருப்பதாலும் மூலவரான அருள்மிகு அம்மனும் மயான மண்ணில் குடிகொண்டு விளங்குவதாலும் மாசாணியம்மன் எனும் பெயர் அழைப்புப் பெயராக அமைந்து பின்னர் நிலைபேறாகியும் விட்டது. எனினும் இது ஆதிபராசக்தியின் கோயில் தான் என்பதும் பரவலாகவே அறியப்பட்டு உள்ளது. பதினேழு அடி நீளமுள்ள பெரிய உருவமாக மேற்கில் தலை வைத்து கிழக்கு நோக்கி கால்களை நீட்டிப் படுத்த நிலையில் காட்சி தருகின்ற இந்த அம்மனின் திருக்கோலமானது மற்ற கோயில்களில் காணப்பெறாத ஒரு வடிவமாகும். அம்மனின் கால்மாட்டில் அசுரன் ஒருவனின் உருவம் உள்ளது.

இதனையடுத்து அருகிலேயே கிழக்கு நோக்கி இரண்டடி உயரமுள்ள மாசனியம்மனின் திருவுருவம் ஒன்றும் நின்ற நிலையில் காட்சியளிக்கிறது. இந்த திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். ஆனைமலையில் மயான பூமியில் மகாசக்தி தோன்றி ராமபிரானுக்கு அருள் வழங்கியிருக்கிறாள். இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சூழலில் ராமபிரான் ஆனைமலைக்கு வந்து சென்றதாக வழிவழியாகக் கூறப்பட்டு வரும் வாய்மொழிக்கதையும் கவனத்தில் கொள்ளத்தக்கதாக அமைகின்றது. உப்பாற்றின் வடகரையில் இருந்த மயானத்தில் மண்ணையெடுத்து அதைக்கொண்டு சக்தியுருவம் ஒன்றை மகுடாசுரன் என்ற அரக்கனை அம்மன் தனது பாதங்களால் அழுத்திய நிலையில் இருப்பதான தோற்றத்தில் உருவாக்கி ஆகம விதிகளின்படி சக்தி வழிபாடு செய்துள்ளார்.

ஆதிபராசக்தி அவர் முன்னிலையில் மயான ருத்திரியாகத் தோன்றி ஸ்ரீராம அவதாரத்தின் நோக்கம் நிறைவேறுவதற்குரிய வரமளித்து மறைந்துள்ளாள். இப்போது இங்கு அருள்பாலிக்கும் மாசனியம்மன் மேற்கண்ட காலத்தில் ராமரின் திருக்கரங்களினால் உருவாகி வழிபாடு செய்யப்பட்ட மகிமை வாய்ந்ததொரு இறைவி ஆவாள். நன்னன் எனும் குறுநில மன்னன் கொங்குச் சீமையின் இந்தப் பகுதியை ஆண்டு வந்த போது அவருக்கு சொந்தமான மாந்தோப்பிலிருந்து ஒரு மரத்தின் மாங்கனியானது கனிந்து ஆற்றில் விழுந்து மிதந்து சென்றதாம், அதை கரையில் இருந்த பென் ஒருத்தி எடுத்துத் தின்ன முற்பட்டபோது அந்த குறுநில மன்னன் அவளை வாளால் வெட்டித் தண்டித்து விட்டான். தவறெதுவும் செய்யாத பெண்ணை அவன் இப்படித் தண்டித்தது தவறு என்று உரியவர்கள் எடுத்துக் கூறினராம் எனினும் இறந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை.

அமைதியடையாத அவள் உள்ளம் மன்னனை தண்டிக்கும் பொருட்டு அந்த இடத்திலே இப்படி மாசானியம்மனாக உருவெடுத்தாக ஒரு பழங்கதையும் கூறப்படுகிறது. மகாமுனியப்பரின் தெற்குப்புறம் லிங்க வடிவத்திலான கல் ஒன்று கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது, அந்தக் கல்லின் மீது மிளகாய் அரைத்துத் துவையலாகப் பூசப்படுகிறது. பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்களும் சொத்துக்களையோ தமது உடைமைகளையோ பறிகொடுத்தவர்களும் திருட்டு போன்ற ஏமாற்றங்களுக்கு ஆளனவர்களும் இங்கு வந்து அம்மனின் முன்னால் நின்று தங்களுக்கு நேரிட்ட இன்னல்களை நினைத்து முறையிட்டு விட்டு கோயிலின் தென்மேற்குப் பகுதியில் போடப்பட்டுள்ள ஆட்டுக்கல்லில் மிளகாயைத் துவையலாக அரைத்தெடுத்து வந்து மேற்குறித்த இடத்தில் உள்ள லிங்க வடிவில் ஆன கல் மீது பூசிவிட்டுச் செல்வதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் பரிகாரம் பெறுவதும் குற்றவாளிகள் தண்டனைக்கு ஆளாவதும் இன்றைக்கும் கூட இந்தத் தெய்வத்தின் நீதித் தன்மையை நடைமுறையில் காட்டுகிற செயல்களாக விளங்கி வருகின்றன.

பொள்ளாச்சியில் இருந்து தென் மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் சேத்துமடை செல்லும் பாதையில் ஆனைமலைப் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

Related Stories: