பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன?

விடியலுக்கு முன்பான அதிகாலை நேரத்தினை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வதை நாம் வழக்கத்தில் கொண்டிருக்கிறோம். சூரிய உதயத்திற்கு முன் வருகின்ற மூன்றே முக்கால் நாழிகை அதாவது அதிகாலை நான்கரை மணி முதல் ஆறு மணி வரையிலான ஒன்றரை மணி நேரத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதில் எந்த விதமான தோஷமும் அண்டாது, இதுவே பிரம்ம முகூர்த்தம் என்று செவிவழியாக ஒரு தகவல் பரப்பப்பட்டுள்ளது. பிரம்மா தன் படைப்புத்தொழிலைச் செய்யும் நேரமிது என்பதால் இந்த நேரத்தில் எந்தவித குற்றமும் காண இயலாது, அதனாலேயே இது பிரம்ம முகூர்த்தம் என்று பெயர் பெற்றது என்று சொல்வோரும் உண்டு. ஆனால், இந்த செய்திகளுக்கு ஜோதிட அறிவியலில் எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. வாழ்வினில் தாங்கள் கண்ட அனுபவத்தினை வைத்து நம் முன்னோர்கள் அவ்வாறு சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம்.

அதிகாலையில், ஊரில் இருக்கும் மாடுகள் அனைத்தும் மேய்ச்சலுக்குச் செல்லும். அவ்வாறு மேய்ச்சலுக்காக நூற்றுக்கணக்கான மாடுகள் செல்லும்போது அவைகளின் கால் குளம்பு பட்டு ஊரெங்கும் புழுதி பறக்கும். இந்த நேரத்தினை ‘கோதூளி லக்னம்’ என்று ஜோதிடர்கள் குறிப்பிடுவார்கள். ஊரெங்கும் பசுக்களின் கால் மண்ணில் பட்டு புழுதி மண்டலமாகக் காட்சியளிக்கும்போது நவகிரஹங்களின் கதிர்வீச்சு அந்தபகுதியினைத் தாக்காது. நாம் தெய்வமாக வணங்கும் பசுவின் கால் பட்ட தூசியில் இருந்து வெளிப்படும் புகை தீயக்கோள்களின் கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

 எனவே, இந்த கோதூளி லக்னத்தின் போது, அதாவது பசுமாடு மேய்ச்சலுக்கு செல்லும் நேரத்தில் செய்யும் சுபநிகழ்ச்சிகளில் எந்த விதமான குறையும் உண்டாகாது என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்தது. நூற்றுக்கணக்கான பசுமாடுகள் மேய்ச்சலுக்குச் செல்வதெல்லாம் தற்காலத்தில், கிராமப்புறத்தில் கூட சாத்தியமில்லாதபோது கோதூளி லக்னத்தினை கணக்கிட முடிவதில்லை. ஆக, தற்போது பிரம்ம முகூர்த்தம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அதிகாலைப் பொழுது கூட குறையுள்ளதாக அமைய வாய்ப்பு உள்ளது. சுபநிகழ்ச்சிகளுக்கான நேரத்தினைக் கணக்கிடும்போது பிரம்ம முகூர்த்தம் சிறப்பான பலனைத் தரும் என்று பொதுவாக கணக்கில் கொள்ளாமல், கிரஹங்களின் சஞ்சாரத்தைக் கொண்டு லக்னத்தைக் கணக்கிட்டு சுபநிகழ்ச்சிகளைத் துவக்குவதே சாலச்சிறந்தது.

Related Stories: