நவகிரகங்களில் இரண்டு கிரகங்கள் முக்கியமானவை. ஒன்று சூரியன். இன்னொன்று சந்திரன். இரண்டு கிரகங்கள் ஒளி கிரகங்கள். உண்மையில் சூரியன் வெகு தூரத்தில் இருக்கிறது. சந்திரன் நமக்கு மிக அருகாமையில் இருக்கிறது.
விதியை தந்த இறைவன்தான் மதியையும் தந்திருக்கிறான்.
விதி மாறாதது.
ஜாதகத்தின் பிறப்புக் கட்டத்தை சாகும்வரை மாற்ற முடியாது. அது அமைந்தது அமைந்ததுதான். பிறந்த நேரம் சரியில்லை என்று மறுபடி தாயின் கர்ப்பத்தில் புகுந்து வேறு நேரத்தில் பிறக்க முடியுமா, என்ன? அது நடக்காத செயல். இனி அதனைப்பற்றி கவலைப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆனால், கடந்த காலத்தை நகர்த்தியதும், நடப்பு காலத்தை நகர்த்திக் கொண்டிருப்பதும், எதிர்காலத்தை நகர்த்த இருப்பதும் சந்திரன்தான். எனவே “விதி சரி இல்லை என்றால், மதியைப் பார்” என்றார்கள்.வள்ளுவப் பேராசான் விதி, மதியைப் பற்றி இரண்டு விஷயங்களை மிக அழுத்தமாகச் சொல்கிறார். திருக்குறளில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” - விதி “முயற்சி திருவினையாக்கும்” - மதி. ஆண்டாளிடம் “எது நன்னாள்?” என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அவள் பதில் சொன்னாள். “மதி நிறைந்த நன்னாள்” என்றைக்கு மதி, பூரணமாக வானில் ஜொலிக்கிறதோ, அது நல்ல நாள். அதாவது பௌர்ணமி நல்லநாள்.இது ஒரு அர்த்தம். இது நேர் அர்த்தம். ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுபர் என்றும், அவர் குருவைப்போல மற்ற கிரகங்களோடு சேரும்போதும், பார்க்கும் பொழுதும் அக்கிரகங்களின் தீய பலன்களைக் குறைக்கிறார் என்றும் விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், இங்கே வேறு ஒரு பொருள் உண்டு. என்றைக்கு அறிவுத் தெளிவு ஏற்படுகிறதோ, அதன்மூலம் நல்ல புத்தி பிறக்கிறதோ, அது நன்னாள்.அது, ராகு காலம் ஆக இருந்தாலும், நல்ல நாள்தான். ராகு காலத்திலும் குழந்தைகள் பிறக்கின்றன. நல்ல செயல்கள் நடக்கின்றன. எனவே, பொதுவாக நாளை, அறிவுத் தெளிவு ஏற்படுகின்ற, மதி நிறைந்த நாள் என்பர். ஒருவர் ஜாதகத்தில், சந்திரன் ஒளி பொருந்திய நிலையில் அமர்கின்ற பொழுது, அவர் பாதையை அவர் வகுத்துக் கொள்வார். துன்பங்கள் வந்தாலும் மனம் கலங்க மாட்டார். சற்று நேரத்தில் அதனை எதிர்கொள்ளும் முடிவை அவர் எடுத்துவிடுவார். அந்த ஆற்றல் அவருக்கு இருக்கும். சந்திரன் காரகங்கள் பலமாக வேலை செய்யும். சந்திரன் சரி இல்லை என்றால், பல எதிர்விளைவுகள் ஏற்படும். சொந்தமாக புத்தியும் இருக்காது. சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இவர்களுக்கு மற்ற கிரக பலன்கள் எத்தனை மேன்மையாக இருப்பினும் பெரிய முன்னேற்றம் இருக்காது. மனதையும் உடலையும் ஆட்சி செய்யும் சந்திரன் கெட்டுவிட்டால், உடலும் சரி இருக்காது. மனதும் இருக்காது. அதோடு நரம்புகளை கையாளும் புதனும் கெட்டு விட்டால் “மன பிறழ்வு” ஏற்பட்டு பேதலித்துக் கிடப்பார்கள். சந்திரனோடு, ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் சேரும் போது இந்த விளைவுகள் ஏற்படும். சுப கிரகங்கள் பார்த்தால், சரி செய்யும்படி இருக்கும்.சந்திர பலத்தினால் பல சங்கடங்களைத் தீர்க்கலாம். அதில் மிக முக்கியமான விஷயம், கோயிலுக்குச் சென்று 5 நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள். வீட்டிலும் ஐந்து நிமிடம் பூஜை செய்யுங்கள். கோயில் என்பது பல அற்புதமான அதிர்வலைகள் உள்ள இடம். மனதின் அலைபாய்ச்சலை ஒழுங்குபடுத்தும்.‘‘மனசு ஒரே குழப்பமா என்னமோ போல் இருந்தது. கோயிலுக்கு வந்தேன். அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. அரைமணிநேரம் போனதே தெரியவில்லை. மனசு நிம்மதி ஆகிவிட்டது’’ என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். இங்கே சந்திரன் மறைமுகமாக பலப்பட்டுவிட்டார் என்று பொருள். உங்களை அறியாமல் ஒரு தெளிவும், அறிவும், வழியும் கோயில் சாமி தரிசனத்தில், அங்குள்ள சூழலில் கிடைத்திருக்கும். இங்கே விதியை விலக்கி, மதி வழிநடத்தும்.‘‘எனக்கு கோயில் பிடிக்காது. பழக்கம் இல்லை’’ என்கிறீர்களா? பரவாயில்லை. தியானம் செய்யுங்கள். யோகா செய்யுங்கள். மதி (சந்திரன்) தெளிவாகும்.நல்ல நண்பர்களிடமும் (நிஜமான நண்பர்களிடம்) பெரியவர்களுடனும் பேசுங்கள். மதி தெளிவாகும். ஜென்ம விதியிலேயே மதியின் பலம் இணைக்கப்பட்டிருந்தால், அவருக்கு யார் ஆலோசனையும் ஜோதிடமும் ஆன்மிகமும் வேண்டாம். அந்த அமைப்பு இல்லாமல் தடுமாறு பவர்களுக்குத்தான் இது. சொந்த மதி இல்லாவிட்டால் இரவல் மதி (ஆலோசனை) வேண்டும். இரவல் மதி, கோயில், பிரார்த்தனை, பூஜை, பெரியவர்கள் ஆலோசனைகளில் கிடைக்கும். சந்திரனைப் பலப்படுத்தி, சகல நன்மைகளும் பெற்று சஞ்சலமின்றி வாழும் வழிகள்தான் இப்படிப்பட்ட வழிகள்.