ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா!

ஆடிச் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் இது. அவளின்அருட் சுழலுக்குள் சிக்குபவர் கள் மேன்மையுறுகிறார்கள்.

நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியை வேப்பிலை முதல் விக்கிரகங்கள் வரை எல்லாவற்றி னுள்ளும் கண்டு வணங்குகிறார்கள். பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம். பெண்ணின் தாய்மையாகவும், வீறு கொண்டெழும் காளியாகவும், பாம்பின் புற்றினூடேவும், சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும், நட்டு வைத்த கல்லுக்குள்ளும் என்று அம்பாள் லட்சம் விதமாக தன்னை வெளிப்படுத்துகிறாள். ‘‘நீ எனக்கு கோயில் கட்டும் முன்பே அதோ அந்த புற்றினுள் நான் தவமிருக்கிறேன்.

அங்கு வந்து என்னைப் பார்’’ என்று கருணை பொங்க கனவில் பேசியிருக்கிறாள். அண்டி வணங்கி அவளின் அருளில் நனைந்தோர் புற்றைச் சுற்றி சுவர் எழுப்பி கோபுரம் நிமிர்த்தி வணங்கினர். எந்த பிரச்னை ஆனாலும் அம்மா.... தாயே... மகாசக்தி... தயாபூரணி... என்று கைகூப்பி கண்ணீர் மல்கி கருணையில் நனைந்தெழுந்தனர்.

பக்தர்கள் பால்குடம் சுமந்தும், மஞ்சள் பூசியும், குங்குமம் சாற்றியும், பொங்கல் வைத்தும், வேப்பிலை சேலை அணிந்தும் பல விதங்களில் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். ஆடியின் அடிப்படை தத்துவமே ‘உன்னை இயக்கும் அதே சக்திதான், ஆங்காங்கு ஆலயங்களில் வெளிப்பட்டிருக்கிறாள். வெளியே தரிசித்த சக்தியை உனக்குள் காண்பதே பிறந்ததன் பயன்’ என்று கூறுகிறது. எனவே, இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனின் அருள் பெருக்கும் 108 ஆலயங்களை வாராவாரம் தரிசிப்போம். குங்குமச் சந்தன மஞ்சளாக வாழ்வு கமழ்வதை அனுபவத்தில் உணர்வோம்...

* சமயபுரம் - மாரியம்மன்

வைணவி எனும் திருப்பெயரோடு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வீற்றிருந்தாள். உக்கிரமாக இருந்ததால் அங்கிருந்து கண்ணனூரிலுள்ள மேட்டின் மீது வைத்தார்கள். இந்த கண்ணனூர் அம்மன்தான் சமயபுரத்து மாரியம்மனாக இன்று பேரருளை பொழிகிறாள். விஜயநகர மன்னர் ஒருவர், ‘‘தென்னாட்டில் எங்கள் படை போரிட்டு வெற்றி பெற்றால் உனக்கு இங்கு கோயில் எழுப்புவோம்’’ என்று வேண்டிக்  கொண்டார். மாரியின் அருளால் போரில் வென்றான்.

அம்மனை கோயிலுக்குள் கொலுவிருத்தி அழகு பார்த்தான். பரிவார தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ண சாமியையும் பிரதிஷ்டை செய்தனர். தமிழகத்தின் முக்கிய சக்தித் தலங்களில் ஒன்றாக விளங்கு கிறது. கோயிலில் எப்போதும் கூட்டம்தான். மாவிளக்கு போடுதல், மொட்டை போடுதல், உடல் உறுப்புகள் உரு என்று எல்லாவிதமான பிரார்த்தனைகளையும் இங்கு நிறைவேற்றுகிறார்கள். சமயபுரத்து மாரியம்மன் பேரருளும், பேரழகும் பொலிய வீற்றிருக்கும் மகாசக்தியாவாள். கைகூப்பி மனதில் நினைத்த கணத்திலேயே வரங்களை ஈனும் வரப்பிரசாதி. உதடு பிரித்தும் பேசும் தெய்வத் தாய். கோடிக்கணக்கான குடும்பங்களின் குல தேவதை. சமயபுரத்தாளே.... என்று திக்கு நோக்கி கைகூப்பினாலேயே ஆசி தரும் ஆதிசக்தி. திருச்சி மாநகரத்திலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 15 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

* வீரபாண்டி கௌமாரி

தேனி மாவட்டம் முல்லையாறு பாய்ந்தோடும் பகுதியில் அமைந்துள்ள வீரபாண்டியில் வீற்றிருக்கிறாள் கௌமாரியம்மன். இந்த மாவட்ட மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள். மதுரையை ஆண்ட மன்னன் வீரபாண்டியனுக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டன. அரசன் பார்வை பெறவேண்டி ஈசனை நோக்கி தவமிருந்தான். ஈசனும், ‘‘புள்ளைநல்லூரியில் கண்ணுடைய தேவி தவமிருக்கிறாள். அவளுக்காக கோயில் எழுப்பு’’ என்று அருளாணையிட்டார். மன்னனும் அதை ஏற்று கோயில் கட்டினான். கண் பார்வை பெற்றான். வீரபாண்டி மாரி என்று அம்மனும் வழிபடப்பட்டு வருகிறாள். இன்றும் பார்வைக் கோளாறு உள்ளவர்கள் இத்தலத்தை நோக்கி வந்து நலம் பெறுகிறார்கள். தேனி - கம்பம் வழியில் தேனியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

* தஞ்சாவூர் வடபத்ரகாளி

 தஞ்சை பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் வடபத்ரகாளியம்மன் எனும் பெயரில் உள்ள நிசும்ப சூதனி ஆலயம் அமைந்துள்ளது. சும்பன் நிசும்பன் எனும் அசுரர்களின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத தேவர்கள் தேவியை நோக்கி துதித்தனர். தேவி காளியாக கௌசீகி எனும் பெயரோடு வெளிப்பட்டு அசுரர்களை வதைத்தாள். அதனாலேயே நிசும்பசூதனி எனும் பெயர் வழங்கப்படுகிறது. விஜயாலயச் சோழன் முதல் ராஜராஜன், ராஜேந்திரன் என்று மாபெரும் சோழ அரசர்கள் இந்த காளியை வணங்கிச் சென்றனர். தீய சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள்

இத்தல மண்ணை மிதித்தாலே போதும். தெளிவு பெறுவது நிச்சயம்.   

* நத்தம் மாரியம்மன்

மதுரை சிற்றரசர்களில் ஒருவரான சொக்கலிங்க நாயக்கரின் அரசபீடத்தை அலங்கரித்த தெய்வமே நத்தம் மாரியம்மன் ஆகும். அரண்மனைக்கு பால் அளக்கும் ஒருவன் பக்கத்து சிற்றூரிலிருந்து குடத்தில் பால் கொணர்வான். பாலைக் கறந்து குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விட்டுத் திரும்பிப் பார்க்க பால் குடம் தானாக காலியாகி கிடந்தது. அரசனுக்கு இந்த விஷயம் சென்றது. சோதித்துப் பார்க்கும்போதும் அப்படியே நடந்தது. மன்னன் அந்த இடத்தை தோண்டச் சொன்னார். ரத்தம் பீறிட்டது. அம்மனின் சிலை தெரிந்தது. அங்கேயே அரசன் அம்மனுக்கு கோயிலைக் கட்டினான். இத்தலம் திண்டுக்கல்லுக்கு அருகேயே உள்ளது. நோய் தீர்க்கும் தேவியாக நத்தம் அம்மன் விளங்குகிறாள்.

* இருக்கன்குடி - மாரியம்மன்

சதுரகிரியில் வாழ்ந்த சிவயோகி ஞானசித்தர் என்பவர் பராசக்தியை நோக்கி தவமிருந்தார். தான் யோக நிஷ்டையாகும் இடத்தில் மாரியம்மனாக அருள்பாலிக்க வேண்டுமென வரம் கோரினார். அன்னையும் அவ்வாறே அருளினாள். வெள்ளப் பெருக்கால் அழிந்து விட்ட கிராமத்திலுள்ள மாரியம்மன் சிலையொன்று சித்தர் ஐக்கியமான பூமிக்குள் வந்து புதைந்தது. பூசாரிப்பெண் ஒருவள் சாணக் கூடையை வைத்து எடுக்க முயன்றபோது தூக்க முடியவில்லை. அப்போது அங்கு பூசாரிப் பெண்ணுக்கு அருள்வந்து தான் மாரியம்மனாக இங்கிருப்பதாக வாக்களித்தாள். பக்தர்கள் இன்றுவரை அவளின் அருட்சாரலில் சுகமாக வாழ்கின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. சில ஆயிரம் குடும்பங்களுக்கு

இவள்தான் குலதேவதை. இடுக்கண் என்று வந்தோரை காப்பாற்றும் இருக்கன்குடி நாயகி இவள்.

* மேல்மலையனூர் - அங்காளபரமேஸ்வரி

பிரம்மனின் கர்வத்தை அடக்குவதற்காக ஈசன் பிரம்மனின் ஐந்தாவது தலையை பிய்த்துப் போட்டார். பிரம்மனின் தலையை கொய்த பாவமும், சரஸ்வதியின் சாபமும் ஈசனைத் துரத்தின. திருவோடு ஏந்தி பசியோடு ஈசன் அலைந்தார். இத்தலத்தில்தான் புற்றுருவாக பார்வதி எழுந்தருளி பிரம்ம கபாலத்தை ஈசனிடமிருந்து பறித்து சாப நிவர்த்தி பெற்றுத் தந்தாள். எளிமையான மக்களிடையே அவர்களுக்குள் ஒருவளாக அங்காளம்மன் புற்றுக்கு பின்னால் எழுந்தருளியிருக்கிறாள். பிரதி அமாவாசையன்று பல லட்சம் பக்தர்கள் இங்கு கூடுவார்கள்.

திண்டிவனம் - செஞ்சி சாலையின் நடுவே பிரியும் சாலையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சகல தோஷங்களையும் சிதறடிக்கும் சீரியவள் இவள்.

* கோவை - சௌடாம்பிகை

ஈசனின் ஆணைப்படி தேவலன் எனும் முனிவர் திருமாலை நோக்கி தவமிருந்தார். அசுரர்கள் அவரை தொந்தரவு செய்த வண்ணம் இருந்தனர். அவர்களின் தொல்லையை திருமாலின் சக்ராயுதம் தடுத்தது. அதையும் தாண்டி ஒரு அம்பு தேவலனை துளைத்தது. அப்போதுதான் அம்பாள் சௌடாம்பிகை எனும் திருநாமத்தோடு எழுந்தருளி காத்தாள். இக்கோயிலில் அனைத்து தெய்வங்களின் சந்நதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன. மனதின் வேதனை போக்குவதில் இவள் மகாதேவி. ஆடி வெள்ளியின் ஒவ்வொரு வாரத்திற்கும் ஒவ்வொரு அலங்காரம் என அழகாக ஜொலிக்கிறாள். இக்கோயிலிலுள்ள அஷ்ட லட்சுமி சந்நதியை நிச்சயம் தரிசிக்க வேண்டும். கோவை நகரின் மையத்தில் ராஜவீதியில் கம்பீரமாக வீற்றிருக்கிறாள்.

* புட்லூர் - பிள்ளைத்தாய்ச்சி அம்மன்

பார்க்கும்போதே உடலும், உள்ளமும் சிலிர்க்கும். கர்ப்பிணிப்  பெண் வடிவில் உலகையே சுமந்து கருணையோடு கால்நீட்டி பிள்ளைத் தாய்ச்சி அம்மனை வேறெந்த தலத்திலும்

தரிசிக்க முடியாது. கருவைச் சுமக்கும் பெண்ணின் தாய்மையை, இங்கு உலகைச் சுமந்து வெளிப் படுத்துகிறாள். குழந்தைவரம் வேண்டி தொட்டில் கட்டுவோர்கள் விரைவில் மழலையோடு

கண்கலங்க நிற்கிறார்கள். சென்னை, ஆவடி - திருவள்ளூர் வழியில் காக்களூர் நிறுத்தத்திற்கு முன்பாக உள்ளது ராமாபுரம் என்ற புட்லூர். அம்மையை தரிசியுங்கள். ஆனந்தம் பெற்றிடுங்கள்.  

* சிதம்பரம் - தில்லை காளி   

சிதம்பரத்தில் ஈசனோடு போட்டியிட்டு நடனம் புரிந்து தோற்றவள் தில்லையின் எல்லையில் கருணையோடு வீற்றிருக்கிறாள். அலகிலா விளையாட்டுடையவனின் பெருமையை உணர்ந்து தானும் அந்த ஆதிசக்தியில் பாதி என்பதை உணர்ந்து, நான்கு முகமான பிரம்ம சாமுண்டியாக கருவறையிலும், உக்கிரகமான காளியாக வெளியே தனி சந்நதியிலும் அமர்ந்திருக்கிறாள். உக்கிரம் குறையக் கூடாது என்பதற்காகவே அபிஷேகம் எதுவும் இவளுக்கு செய்யப்படு வதில்லை. தீவினைகளோ, தீய சக்திகளின் பாதிப்புகள் இருந்தாலோ தில்லை காளியின் தரிசனத்தில் தகர்ந்து போகும். இந்த ஆலயம் சிதம்பரத்திலேயே உள்ளது.

* மயிலாப்பூர் - முண்டகக் கண்ணி

மயிலையின் பேசும் தெய்வம். எப்போது வந்தமர்ந்தாள் என்று தெரியவில்லை. ஆனால், எப்போதுமே பக்தர்களை காக்க இங்குதான் நான் இருக்கப்போகிறேன் என்பதுபோல

வீற்றிருக்கிறாள். மூலவருக்கான கருவறை விமானம் இல்லை. கட்ட அவள் உத்தரவு தரவில்லை என்கிறார்கள். அதனாலேயே கீற்றுக் கொட்டைக்குள் கருணை மணம் கமழ வாசம் செய்கிறாள். முண்டகம் என்றால் தாமரை என்று பொருள். தாமரை போன்ற கண்களை உடையவள் என்று பொருள். ஞான சூரியனை கண்ட தாமரை மலர்வதுபோல உங்களுக்குள்ளிருக்கும் ஞான தாமரையை இவள் மலர வைப்பாள். உயிரை காப்பாற்றுதலும், உயர்ந்த பதவியில்  அமர்த்துதலையும் இவள் இங்கு எளிதாக செய்கிறாள். மயிலாப்பூர் நகரத்தின் மையத்திலேயே இவள் கோயில் கொண்டிருக்கிறாள்.

* மங்கலம்பேட்டை - மங்களநாயகி

செவ்வகக் கல் மூர்த்தத்தில் சற்று உக்கிரமாக அருளும் வனதுர்க்கை இவள். கண்ணகிக்கு கோயில் கட்ட சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து இரு கற்களை கொண்டு வந்தபோது தனக்கு மிகப் பெரிய உதவிகளை செய்த பரூர் பாளையத்தை சேர்ந்த குறுநில மன்னனுக்கு தான் கொண்டு வந்த இரு புனிதக் கற்களில் ஒன்றை அவனுக்கு ஈந்தான். அதில் ஒன்றில்தான் பரூர் மன்னன் உக்கிர நாயகியான இந்த மங்கலநாயகியை எழுந்தருளச் செய்தான். கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் அமைந்துள்ள இக்கோயில் உளுந்தூர் பேட்டையிலிருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

* சிறுவாச்சூர் - மதுரகாளியம்மன்  

காளியின் அருளால் மதுரையை எரித்தாள் கண்ணகி. அங்கிருந்து சிறுவாச்சூர் செல்லியம்மன் ஆலயத்திற்கு வந்தாள். செல்லியம்மனோ நீ இங்கு இருக்க வேண்டாம். என்னிடமிருந்து வரம் பெற்ற அரக்கன் ஒருவன் என்னையே அடிமைப்படுத்தி வைத்துள்ளான். கொடுத்த வரத்தை கொடுஞ்செயலுக்கு உபயோகப்படுத்துகிறான். எனவே, நீ இங்கிருந்து சென்று விடு தாயே என்றாள். கண்ணகி கண்கள் மூடி காளியை வணங்கினாள். அரக்கன் வரும் நேரத்திற்காக காத்திருந்தாள். வந்த அரக்கனும் அகம்பாவத்

துடன் பேச அங்கேயே அவனை காளி வதம் செய்தாள்.

செல்லியம்மன் மலைமீது குடிகொள்ள மதுரகாளியம்மன் என்ற திருப்பெயரோடு காளி கீழே குடிகொண்டாள். திங்கள் மற்றும் வெள்ளி மட்டும்தான் ஆலயம் திறந்திருக்கும். மாவிளக்கு ஏற்றினால் எண்ணமெல்லாம் ஈடேறும். ஆலய வளாகத்திலேயே உரல்களும் உலக்கைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. அரிசி கொண்டு வந்து ஊற வைத்து அங்கேயே இடித்து விளக்கேற்றுகின்றனர். குழந்தைப்பேறு வேண்டுவோர், கணவன் மனைவி பிரச்னை இருப்போர் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இது. திருச்சி - பெரம்பலூர் நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.

* அறச்சலூர் - அறச்சாலை அம்மன்

அறம் வளர்த்த ஊர் என்பதால் அறச்சலூர் அம்மன் என்று பெயர் வந்தது. கம்பீரமான குதிரைகளுக்கு மத்தியில் எண்கரங்களோடு சூரனை வதம் செய்த கையோடு வீற்றிருக்கிறாள். ஜாதகப் பொருத்தமே இல்லை என்றாலும் கூட இந்த அம்மனின் உத்தரவு இருந்தால் போதும் என்கிறார்கள். பூ போட்டு வாக்கு கேட்கிறார்கள். வெள்ளை நிற பூக்கள் மூன்றும், சிகப்பு நிற பூக்கள் மூன்றும் பயன்படுத்துவர்.

சிகப்பு பூ வந்தால் சுப விசேஷங்கள் நிறைவேறும் என்றும், வெள்ளை நிற பூக்கள் வந்தால் வீடு மனை நிலம் வாங்கலாம் என்பதாக அம்மன் உத்தரவிடு

கிறாள். மாங்கல்ய தோஷம் நீங்க அம்மனுக்கு மாங்கல்யத்தை வைத்து வழிபட்டு அம்மனுக்கே அதை காணிக்கையாக தருகிறாள். ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் 24வது கிலோமீட்டரில் இக்கோயில் உள்ளது.

*  திருவக்கரை - வக்ரகாளி

ஆதித்ய சோழரும், பராந்தகரும், கண்டராதித்தரும், செம்பியன் மாதேவியாரும் பார்த்துப் பார்த்து அமைத்த கோயில் இது. சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாகவே வக்ரகாளி அதிஉக்கிரமாக தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். வக்ராசுரன் என்பவன் ஈசனை நோக்கி தவம் புரிந்தான். ஈசனின் தரிசனமும் வரங்களும் பெற்றான். தேவலோகத்தை புரட்டிப் போட்டான். கேட்பாரே இல்லாமல் திரிந்தவனை காளி எதிர்கொண்டாள். வக்ராசுரனையும், அவள் தங்கையான துன்முகியையும் விஷ்ணுவும் காளியும் முறையே வதம் செய்தனர்.

வதம் செய்த உக்கிரத்தோடேயே இத்தலத்தில் அமர்ந்தாள். இன்றும் அந்த திருவெம்மை அங்கு பரவியிருப்பதை தரிசிப்போர் நிச்சயம் உணர்வர். ஜாதக ரீதியாகவும், தீய சக்திகளால் பாதிக்கப்பட்டு மனநிலை சரியில்லாதவர்கள் இச்சந்நதி நெருங்கும்போது தெளிவடைவர் என்பது உறுதி. திண்டிவனம் - விழுப்புரம் பாதையில் மயிலத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

* திருவேற்காடு - கருமாரியம்மன்

வெள்வேல மரங்கள் அதிகமாக இருந்ததால் வேற்காடு என்றானது. வேதங்களையே மரங்களாக்கி அதனடியில் லிங்க மூர்த்தத்தில் ஈசன் வெளிப்பட்டார். லிங்கத்தோடு அன்னையும் உதயமானாள். கொடிய அசுரனை அழிக்க முருகனுக்கு கருமாரி அன்னை தம் திருக்கரத்தால் வேல் அளித்தாள். அதனாலேயே வேற்கன்னி ஆனாள். வேலன் வேலால் கீறி தீர்த்தம் உண்டாக்கினான். அதுவே வேலாயுத தீர்த்தமாயிற்று. அந்த பரா சக்தியே இங்கு மாரியம்மனாக அமர்ந்து எல்லோரையும் காக்கிறாள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே இந்த கருமாரி. வேண்டுதல் இல்லாமலேயே வேண்டியதை தருவதில் பெற்றவளுக்கும் நிகரற்று விளங்கும் தாய் இவள். இத்தலம் சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகே உள்ளது.

* மாங்காடு - காமாட்சி

மாங்காட்டின் மையத்தில் அமர்ந்த மகாதேவி. ஆதிசங்கரரால் போற்றித் துதிக்கப்பட்ட ஆதிசக்தி. ஒரு காலத்தில் அக்னிக்கு மத்தியில் உக்கிர தவமிருந்தாள். தவத்தின் வெம்மை காட்டிற்குள்ளும் எவரையும் நெருங்கவிடாது தடுத்தது. ஆதிசங்கரர் அம்மையின் உக்கிரமான இருப்பை உணர்ந்து சாந்தமாக்கி எல்லோரையும் அருகே வரச் செய்தார். அர்த்தமேரு மகாயந்திரம் எனும் யந்திரத்தை பரப்பி சக்தியின் மழையில் எல்லோரையும் நனையச் செய்தார். அம்மை தாய்மையோடு உயிர்களை நோக்கினாள். இன்னருளை பொழிந்தாள். திருமணமா... குழந்தைப்பேறா... உத்யோக உயர்வா... ஞானத் தேடலா... என்று எல்லாவற்றையும் கைமேல் கனியாக எளிதாக அருள்கிறாள், இந்த மாங்காட்டு நாயகி. சென்னையில் குன்றத்தூர், பூவிருந்தவல்லி ஆகிய இரு ஊர்களுக்கும் இடையே  உள்ளது.

* புன்னைநல்லூர் - மாரியம்மன்

திக்குகளையே ஆடையாக அணிந்து ஞானத்தின் உச்சியில் தோய்ந்திருந்த ஸ்ரீசதாசிவபிரம்மேந்திரரின் திருக்கரங்களால் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட மாரியம்மன் இவள். துளஜா மன்னனின் மகளுக்கு அம்மை நோயினால் கண் பார்வை பாதிக்கப்பட்டது. அரச மருத்துவம் பார்த்தும் பலனில்லை. அரசரின் கனவில் தோன்றி பாலகியாய் சிரித்தாள். தனிக்கோயில் எழுப்பும்படி அருளாணையிட்டாள். புற்றுருவாக இருந்தவளை உருவமாக்கத்தான் ஸ்ரீசதாசிவபிரம்மேந்திரர் சென்றார்.

அங்கேயே சக்ர பிரதிஷ்டையும் செய்தார். மாரியம்மன் அருளை மழையாகப் பொழிந்தாள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தைலக் காப்பில் நனைகிறாள். அம்மை நோய் கண்டவர்களுக்காக அம்மைநோய் மண்டபம் உள்ளது. இங்கு மாவிளக்கு மாவு பிரார்த்தனை நிறைவேற்றுகிறார்கள். பார்வை குறைபாடு உடையவர்கள் இவளை தரிசிக்க விரைவில் நலமடைகிறார்கள். தஞ்சையிலிருது 9 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.  

* ஒருவந்தூர் - பிடாரி செல்லாண்டியம்மன்

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த நிலம் முழுக்க உப்பு மண்ணாக இருந்திருக்கிறது. உப்பு மண்ணை வெட்டியபடியே இருக்க, ‘ணங்...ணங்’ என்று சத்தம் கேட்டது. ஓசை வந்த இடத்தில் தோண்டிப்பார்க்க குருதி பொங்க அன்னையின் சிலை இருந்தது. ஈசனும், அம்மையும் சேர்ந்து அருள்புரியும் மூர்த்தமாக இருந்ததால் ஒருவந்தூர் என்றானது. பக்தர்கள் பிடாரி செல்லாண்டியம்மன் என்று திருப்பெயரிட்டு அழைத்தனர்.

பார்வதி தேவி பூஜை செய்வதுபோன்ற அமைப்பில் சிற்பம் ஒன்று இங்கு உள்ளது. மாசி மக நட்சத்திரத்தில் நடக்கும் தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக இருக்கும். தினந்தோறும் கோயிலைச் சேர்ந்த வேலும், பூஜைப் பொருட்களும் மேளதாளத்தோடு எட்டுப்பட்டி கிராமங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோயிலை அடைகிறது. திருமண வரம் வேண்டி பெண்கள் இத்தலத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். விரைவிலேயே தம்பதியராக வந்து கைக்கூப்பி வணங்கவும் செய்கிறார்கள். நாமக்கல் மாவட்டம், மோகனூர் - காட்டுப்புத்தூர் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது.

* படவேடு - ரேணுகாம்பாள்

ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி அன்னையின் சிரசை கொண்டுவந்தார் பரசுராமர். சொன்னதை செய்த உனக்கு என்ன வேண்டுமென்று தந்தை ஜமதக்னி முனிவர் பரசுராமரை கேட்டார். என்னை பெற்றவளையே திருப்பிக் கேட்கிறேன் என்று தீர்க்கமாக சொன்னார் பரசுராமர். தலையையும் உடலையும் கொண்டு வா உயிர்ப்பித்துத் தருகிறேன் என்றார் ஜமதக்னி முனிவர். அப்படி அவர் கொண்டுவந்த உடலை நீர் தெளித்து சேர்த்து ஒளியில் பார்க்க தலைக் குரிய உடல் மாறியிருந்தது.

ஆனாலும் அவளே ரேணுகாம்பாள் என்று மகாசக்தியாக மலர்ந்தாள். அவளே படவேடு எனும் தலத்தில் அமர்ந்தாள். துயர் எனும் சொல் இனி உங்கள் வாழ்வில் இல்லை என்று திடமாக பக்தர்களுக்காக அமர்ந்திருக்கிறாள். படவேட்டிலுள்ள இத்தலத்தைச் சுற்றிலும் நிறைய ஆலயங்கள் உள்ளன. காளி கோயில்களும் நிறைந்திருக்கின்றன. சக்தியின் வீச்சு மிகுந்த தலத்தில் தலையாய தலமாகவும் இது விளங்குகிறது. சம்புவராயர்கள் படவேடுவை கோயில் நகரமாகவே உருவாக்கினார்கள். ஆரணிக்கும் வேலூருக்கும் இடையில் மலைகளுக்கு நடுவே படவேடு கோயில்கள் அமைந்துள்ளது.

* கோட்டை மாரியம்மன் - சேலம்

சூரிய சந்திர கிரகணங்களில் கோயில்கள் பூட்டப்படுவது வழக்கம். ஆனால், கோட்டை மாரியம்மன் ஆலயம் பூட்டப்படாது. சூரிய சந்திர கிரகண கதிர்களால் வரும் பாதிப்பிலிருந்து காக்கிறாள் என்றும் சொல்கிறார்கள். ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம். அக்னி திசை நோக்கி அமர்ந்திருக்கிறாள். வலது காலை ஊன்றி, இடது காலை மடக்கி வீராசனத்தில் வீற்றிருக்கிறாள். பெரிய மாரியம்மனின் கண்களும், பலி பீடத்திலுள்ள அம்மனின் கண்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பாகும்.

பக்தர்கள் வீட்டில் அம்மை வார்த்திருக்கும் நேரத்தில் அம்மையின் வெம்மையை குறைக்க பலி பீடத்தில் வேப்பிலை கலந்த நீரை ஊற்றி அம்மனை குளிர வைப்பார்கள். உப்பு, பருப்பு, மிளகு, வெங்காயம் போன்றவற்றை பிரார்த்தனை பொருட்களாக செலுத்துகின்றனர். கண் வலி, நெஞ்சு வலி போன்ற உபாதைகள் தீர கண் மலர், மண் உரு, கை, கால், முகம் போன்ற பிரதிமைகளை பிரார்த்தனை பொருட்களாக செலுத்துகின்றனர். சேலம் மாநகரின் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலும், ரயில் நிலையத்திலிருந்து ஐந்து மைல் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

* மீனாட்சி - மதுரை

மதுரையே மீனாட்சி; மீனாட்சியே மதுரை என்று இரண்டையும் பிரிக்க முடியாத அளவுக்கு காலவெளிக்குள் அகப்படாத காலத்திலேயே அன்னை அரசியாக குடிகொண்டிருக்கிறாள். சக்தி பீடங்களில் முக்கியத் தலமாக இது விளங்கு கிறது. இதை ராஜமாதங்கி எனும் சியாமளா பீடம் என்றழைக்கிறார்கள். மீன் தன் கண்களால் கண்டே முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கச் செய்யும்.  இதை ஞானிகள் மத்ஸ்ய தீட்சை என்றும் நயன தீட்சை என்றும் கூறுவர்.

அப்படிப்பட்ட தீட்சையை உடையவளாக இவள் விளங்குவதால் மீனாட்சி எனும் திருப்பெயரோடு விளங்குகிறாள் என்கிறார்கள். திருக்கண்களாலேயே அருளை வாரியிறைக்கிறாள். தேவேந்திரனால் கட்டப்பட்ட கருவறை இது. மீனாட்சி அரசியாக இருப்பதால் அம்மனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகு தரிசிக்கலாம். ஆதிசங்கரர் மீனாட்சி அம்மனை தரிசித்து மீனாட்சி பஞ்சரத்னம், மீனாட்சி அஷ்டக ஸ்தோத்திரத்தை பாடினார். தரிசித்தாலே போதும். தரிசிப்போரின் பிறவித் தளையை போக்கும் பேரரசி இவள்.

* ஆண்டாள் - ஸ்ரீவில்லிபுத்தூர்

ஆடிப் பூரம் என்றாலே ஆண்டாள்தான் ஞாபகம் வரும். பெரியாழ்வாரின் தவப் பயனால் நள வருடம் ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தசியில் பூர நட்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமையன்று துளசி வனத்தில் அவருக்கு மகளாகக் கிடைத்தாள். இத்தலத்தில் வடகிழக்கில் வடபத்ரசாயி கோயிலும், மேற்கில் ஆண்டாள் கோயிலும் அமைந்துள்ளன. உற்சவரை ரங்க மன்னார், ராஜ மன்னார் என்றெல்லாம் அழைப்பர். மன்னாருக்கு தொடையழகு. தொடை என்றால் மாலை என்பது பொருள். விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில் இவர் மாப்பிள்ளை கோலத்தில் காட்சியளிப்பார். ஆண்டாளின் தோளின் மீது வீற்றிருக்கும் இலை, பூக்களான கிளி தினமும் புதியதாகச் செய்யப்படுகிறது. சித்ரா பௌர்ணமியன்று மதுரை தல்லா குளத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர், ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் பரிவட்டங்களை அணிந்த பின்னரே வைகை ஆற்றில் இறங்குகிறார்.

* திருநறையூர்  -  ஆகாசமாரி

முன்பொரு காலத்தில் கௌரவ குலத்தினர் எனும் கவரைச் செட்டியார்கள் குதிரை மேல் மல்லாரம் வைத்துக் கொண்டு நாட்கணக்கில் வெளியூருக்குச் சென்று வளையல் வியாபாரம் செய்தார்கள். ஒருசமயம் அவர்களுள் சிலர் சமயபுரம் சென்று வளையல் வியாபாரம் செய்யும்போது ஒரு பெரியவரின் கனவில் சமயபுரத்தாள் இளம்பெண் வடிவில் தோன்றி வளையல் அணிவிக்கச் சொன்னாள். பெரியவரும் அகமகிழ்ந்து வளையல் அணிவிக்க முயன்றார்.

ஆனால், வளையலை அணிவிக்க முடியாது உடைந்து விழுந்தது. எல்லா வளையல்களும் உடைந்து போயின. ஏன் இப்படி.... என்று யோசிக்கும்பொழுதே கனவு கலைந்தது. கனவில் உடைந்த வளையல்கள் நிஜத்தில் உடைந்திருந்ததைப் பார்த்து இன்னும் உடைந்து போனார். உடன் வந்தோருக்கெல்லாம் அம்மை நோயும் கண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஆலயக் குருக்கள், ‘‘உடைந்த வளையல்களுக்கு ஈடாக பொற்காசுகள் கொடுக்க வேண்டுமென பராசக்தி கட்டளையிட்டிருக்கிறாள்’’ என்றவுடன் எல்லோரும் அதிர்ந்தனர். அந்தக்கணமே ஆகாயத்தில் காட்சி தந்தாள் அன்னை.

அன்னையை எல்லோரும் ஆகாச மாரி.... என்று அடிவயிற்றிலிருந்து அழைத்தனர். ‘‘எங்கள் ஊருக்கு வந்து விடம்மா’’ என்று கண்களில் நீர்மல்க கேட்டனர். வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக் கிழமை சமயபுரத்தை விட்டு ஆகாய மார்க்கமாய் உங்கள் ஊருக்கு வருவதாக உறுதி கூறினாள். அவ்வண்ணமே ஆண்டு தோறும் இந்த தினத்தில் சமயபுரத்தாள் அலங்காரவல்லியாக காட்சி தருகிறாள். நல்ல கணவன் அமைய வேண்டி கன்னிப் பெண்கள் துதிக்கிறார்கள். கும்பகோணத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் பூந்தோட்டம் வழித்தடத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

* சக்திபுரி - இடைச்சீஸ்வரி

இடைச்சீஸ்வரி எனும் இந்த அம்மனை மூன்று சக்திகளின் சங்கமம் என்கிறார்கள். காமகாசுரன் என்பவன் காமப்பித்து பிடித்து அலைந்தான். பெண்களை இம்சித்தான். அம்பிகையின் மீதும் இச்சை கொண்டு திரிந்தான். அமராவதி ஆற்றங்கரையில் பால், தயிர் விற்கும் இடைகுலப் பெண்ணாக அம்மன் உதயமானாள். அதையறிந்த அரக்கனும் வளையல் வியாபாரியாக மாறி, அன்னையின் கரத்திற்கு வளையல் போடத் துணிந்தான். அன்னை மறுத்தாள். வலுக்கட்டாயமாக கரம்பற்ற அன்னை விண்ணுக்கும் மண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுத்தாள். தலையைப் பிடித்துச் சுழற்றி திருகி எறிந்தாள். உடம்பை தனியே போட்டாள். எறியப்பட்ட தலை இடைச்சீஸ்வரி கோயிலின் அக்னிமூலையில் போய் விழுந்தது.

தலையில்லா உடல் கோயிலின் முன்புறம் அன்னையின் பார்வையில்படுபடி விழுந்தது. வதத்திற்குப் பிறகு உக்கிரம் தணியாது அலைந்த அன்னையின் முன்பு ஈசன் தோன்றி சாந்தப்படுத்தினார். இச்சா, கிரியா, ஞான சக்திகளின் சங்கமமாக வீற்றிருக்கிறாள். ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று கும்பாபிஷேகம் நடப்பதுதான் இத்தலத்தின் சிறப்பு. பங்குனி மாதம் பௌர்ணமியன்று துளசி மாலை அணிந்து, மஞ்சள் சட்டை, சிகப்பு வேஷ்டி, பச்சை துண்டு இவற்றுடன் அன்னைக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஒரு மாதம் விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். குழந்தை பாக்கியம் பெற இத்தலத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி - கோவை சாலையில் 18வது கி.மீ. தொலைவில் வயலூர் எனும் தலம் உள்ளது. அதற்கடுத்த சாமிநாதபுரத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் சக்திபுரி உள்ளது.   

* பகவதி அம்மன் - கன்னியாகுமரி

முக்கடலும் சங்கமிக்கும் புண்ணிய பூமி. சக்தி பீடங்களில் முக்கியத் தலம். குமரியாக கோலம் காட்டும் கொள்ளை அழகை காண மாதவம் செய்திருக்க வேண்டும். இக்கோயிலில் கன்யா பூஜை செய்ய மழலை பாக்கியம் கிட்டுவது உறுதி. குமரி பகவதிக்கு தோழிகள் இருவர். ஒருத்தி கோயிலின் வடக்கில் தியாக சுந்தரியாகவும், மற்றவள் வடமேற்கில் பாலசுந்தரியாகவும் வீற்றிருக்கிறார்கள். பகவதி வலக்கையில் ருத்ராட்ச மாலையுடனும், இடது கையை தொடைமீது வைத்து நின்றவாறு தவக்கோலத்தில் அருள்கிறாள்.

தலை கிரீடத்தில் பிறை சந்திரனும், மூக்கில் வைரமூக்குத்தியும் மின்ன பேரழகோடு பொலிகிறாள். மகிமைமிக்க தீர்த்தக் கட்டம் என்று ராமாயணமும், மகாபாரதமும் கன்னியாகுமரியை வியந்து பேசுகிறது. ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்கு முன்பு கன்னியாகுமரியை வணங்கிச் சென்றார். பகன், முகன் எனும் அசுரர்களை அழித்த காளி கொல்கத்தாவிலும், கன்னியாகுமரியிலும் நிலைபெற்று பாரதத்தின் இரு எல்லைகளையும் காப்பதாக ஒரு ஐதீகம் உண்டு.

கிருஷ்ணா

Related Stories: