மணலுக்குள் புதைந்திருந்த மகேசன் வெளிவந்தார்!

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், பெருமல்லபடு

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பெருமல்லபடு என்ற கிராமத்தில் 300 ஆண்டுகள்  பழமையான  கோயில்  ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. அங்கிருந்த மணல்பாங்கான இடத்தை தோண்டியபோது பெரிய சிவன் கோயில் இருப்பதை ஊர் மக்கள் கண்டறிந்துள்ளனர். கிபி 1850இல் பெண்ணா ஆற்றில் பெருவெள்ளம் வந்தபோது அதன் கரைப்பகுதி மணலால் மூடப்பட்டது. அங்கிருந்த மக்கள் ஆற்று வெள்ளத்திற்கு அஞ்சி வேறு ஊர்களில் குடியேறினர். இப்பகுதி மணல் மேடாகி விட்டது.  இங்கிருந்த நாகேஸ்வர சுவாமி கோயிலையும் மணல் மூடிவிட்டது. இந்த கொரோனோ காலத்தில் ஊர் மக்கள் தங்கள் முன்னோர்களிடம் கேட்ட தகவலை நினைவுபடுத்தி இங்கிருந்த கோயிலை தேட முற்பட்டனர். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு செங்கற்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்த நாகேஸ்வர சுவாமி கோயிலின் முக மண்டபம் மட்டுமே இப்போது கிடைத்துள்ளது. இங்கு கோடி தீர்த்தம் கோயில் மற்றும் சங்கம் எனும் பெயரிலும் சிவாலயம் இருந்ததாம். தொல்லியல் மற்றும் இந்து அறநிலையத் துறைகள் மற்ற பகுதிகளிலும் அகழ்வாய்வு செய்து ஊர்மக்கள் சொல்வதற்கேற்ப இக்கோயிலின் மற்ற பகுதிகளையும், வேறு கோயில்களையும் கண்டறியும் பணியை மேற்கொள்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போதைக்கு இக்கோயில்பற்றிய அறிமுகத் தகவல்களாக இவ்வளவுதான் தெரிய வந்துள்ளன. மேலும், அகழாய்வு செய்யப்பட்டால் எந்த மன்னர் கட்டினார். கோயிலில் எத்தனை சந்நதிகள் இருந்தன. வேறு ஏதேனும் கல்வெட்டுகள் கிடைக்கின்றனவா என்றெல்லாம் தெரியவரும்.  

தொகுப்பு: முனைவர் செ. ராஜேஸ்வரி

Related Stories: