வறுமையை விரட்டும் வேங்கடவன் தலங்கள்

இந்த ஊரடங்கு முடிந்த பிறகு பெரும்பாலான கோயில்கள் திறக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. இந்த ஊரடங்கால் தனி மனிதன் முதல் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்பட்டிருக்கிறது. கலியுக வரதனாம் கண்கண்ட தெய்வம் திருமலை வேங்கடவனே இனி நம் ஒவ்வொருவரின் வறுமையை விரட்டி செல்வத்தை அருள வேண்டும். அதனால், இந்த ஊரடங்கிற்குப் பிறகு இயன்ற போதெல்லாம் தமிழகத்திலுள்ள இத்தலங்களை தரிசித்து வாருங்கள். நீங்காத செல்வத்தை பெற்றிடுங்கள்.

திருமலை வையாவூர்

அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வான்வழியே வந்தபோது இத்தலத்தினால் கவரப்பட்டார். சஞ்சீவி மலையை சற்றே கீழே வைத்துவிட்டு கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட முற்பட்டபோது அனுமனால் சஞ்சீவி மலையை தூக்க முடியவில்லை. ஏதோ ஒரு சக்தி அவரை நகரவிடாது தடுத்தது. ‘ஐயனே நான் என்ன செய்ய’ என்று நெஞ்சுருகி ராமனை பிரார்த்தித்தார். அங்கே புன்னகையோடு வெங்கடேசப் பெருமாள் காட்சியளித்தார். இன்றும் நம் பொருட்டு அலர்மேல் மங்கையோடு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் எனும் திருநாமத்தோடு சேவை சாதிக்கிறார். இத்தலம் சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டு - மதுராந்தகம் இடையே ஜி.எஸ்.டி. சாலையின் உட்பகுதியில் படாளம் கூட்டு ரோடிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

கருங்குளம்

தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி கரையோரமுள்ள தென் திருப்பதிகளுள் ஒன்றாக கருங்குளம் வெங்கடாஜலபதி கோயில் விளங்குகிறது. மூலவர் வெங்கடாஜலபதி தனித்தன்மை வாய்ந்தவர். அழகனான பெருமாள் இங்கு உருவமற்ற வராக சந்தனக் கட்டையில் அருவமாக அமர்ந்து ஆட்சி செய்கிறார். இத்தலத்தினை பொறுத்தவரையில் மலையடி வாரத்திலுள்ள மார்த்தாண்டேஸ்வரரை வணங்கி விட்டுத்தான் வெங்கடாஜலபதியை வணங்குகின்றனர். திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரதான சாலையில் 15வது கிலோ மீட்டரில் கருங்குளம் அமைந்துள்ளது. நெல்லை டவுனிலிருந்து பஸ் வசதி உண்டு.

குணசீலம்

திருச்சிக்கு அருகே குணசீலம் எனும் தலத்தில் மூலவராகவே பிரசன்ன வெங்கடாஜலபதி அருள்கிறார். இங்கும் சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சந்நதி இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோயிலாகும். உற்சவரின் திருநாம ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆகும். ஒவ்வொரு கோயிலிலும் விழாவின்போது மட்டுமே கருட சேவை சாதிப்பார்கள். ஆனால், இங்கு பிரதி திருவோண நட்சத்திரத்தன்று கருட சேவை சாதிக்கும் நிகழ்வு நடைபெறும். பக்தர்களின் மனக்குறை மட்டுமல்லாது மன நோயாளிகள் பூரணமாக நிவர்த்தி பெற இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர். திருச்சி-சேலம் பாதையில் 24 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

கும்பகோணம்

கும்பகோணம் குமரன் தெருவிலுள்ள திருக்குடந்தை திருப்பதி என்கிற ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயில் 600 வருடங்கள் பழமையானது. இங்கு மூலவராகவே வெங்கடாஜலபதியும், தனிச் சந்நதியில் பத்மாவதித் தாயார் அருள்கிறார். பஞ்சமுக ஆஞ்சநேயர், மகாவிஷ்ணுவின் பத்து தசாவதாரப் பெருமாள்களின் சந்நதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலிக்கு அருகேயுள்ள இத்தலம் உலகப் புகழ்பெற்ற சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்றதாகும். கலை நுணுக்கங்கள் வாய்ந்த உயிரோவியங்கள் நிறைந்த தலம். 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயமாகும். திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இக்கோயிலிலேயே நேர்த்திக் கடன் செலுத்தலாம். இங்குள்ள சில கற்சிலைகளை தட்டினால் வெண்கல ஓசை ஒலிக்கும். பெருமாள் நின்ற கோலத்தில் வெங்கடாஜலபதியாகக் காட்சியளிக்கிறார். பத்மாவதித் தாயாரும் அருட்காட்சியளிக்கிறார்கள். நெல்லையிலிருந்து 11 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

சின்ன திருப்பதி

தலத்தின் பெயரே சின்ன திருப்பதிதான். தர்மபுரி மாவட்டம் ஓசூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பாகலூர் செல்லும் வழியில் இத்தலம் அமைந்துள்ளது. திருமலை திருப்பதியில் பெருமாள் மலை மீதும் தாயார் திருச்சானூர் தலத்திலும் அருட்பாலிக்கிறார்கள். ஆனால், இத்தலத்தில் மகாலட்சுமி, பத்மாவதி தாயார்களோடு சேர்ந்து சேவை சாதிக்கிறார். இங்கு பெருமாளின் கரம் உயர்த்தி அருட்பாலிக்கும் நிலையில் காட்சி தருகிறார். வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

சென்னை - சைதாப்பேட்டை

மேற்கு சைதாப்பேட்டையில் மிகப் பழமையான பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. தாயார் மற்றும் பெருமாளின் திருமேனி பூமியிலிருந்து கிடைத்ததாக கூறுகிறார்கள். மேலும், விஜய நகர மன்னர்களிடம் பணியாற்றிய தேசாய் எனும் பிரிவைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது. வருடந்தோறும் தமிழ் வருடப் பிறப்பு அன்று பிரம்மோத்சவ விழா தொடங்கி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. பிரார்த்தனைகள் நிறைவேற பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தாயார் அலர்மேல்மங்கை எனும் திருப்பெயரிலேயே அருள்கிறார். செண்பக மரம் தலவிருட்சமாக விளங்குகிறது.

மதுரை

அப்பன் திருப்பதி கோயில் என்றே இக்கோயிலை அழைப்பர். மூலவராக ஸ்ரீநிவாசப் பெருமாள் அருட்பாலிக்கிறார். அலர்மேல் மங்கை எனும் திருப்பெயரில் தாயார் அருள்கிறார். சித்திரை திருவிழாவின்போது அழகர்கோவிலிலிருந்து புறப்படும் கள்ளழகர் இத்தல மண்டபத்தில் ஓர் இரவு முழுவதும் தங்கிச் செல்லுவார். கருவறையில் ஸ்ரீநிவாசப் பெருமாள் தன் தேவியருடன் அருட்பாலிக்கிறார். மதுரையிலிருந்து அழகர்கோவிலுக்குச் செல்லும் வழியில் அப்பன் திருப்பதி தலம் அமைந்துள்ளது.

மோகனூர்

காவிரிக் கரையில் அமைந்துள்ள அழகிய தலம் இது. கருவறையில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். நவராத்திரியின்போது திருப்பதியில் ஒருநாள் எனும் உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஒருநாள்மட்டும் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நடக்கும் முறையிலேயே அனைத்து பூஜைகளும் நடக்கும். அர்த்தநாரீஸ்வரர் போல கிருஷ்ணனும் ருக்மிணியும் இணைந்த அபூர்வ திருக்கோலத்தை இத்தலத்தில் தரிசிக்கலாம். இந்த அமைப்பை சம்மோஹன கிருஷ்ணன் என்பார்கள். மோகனூர் எனும் தலப்பெயரோடு இதை ஒப்பிட்டுக் கொண்டால் தலத்தின் காரணப் பெயர் எப்படி வந்தது என்று புரியும். புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ. தொலைவில் மோகனூர் அமைந்துள்ளது.

ஆப்பூர்

சிங்கப் பெருமாள் கோவிலிலிருந்து

ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஆப்பூர் அமைந்துள்ளது. இங்கு மலைமீது வெங்கடேசப் பெருமாளின் கோயில் அமைந்துள்ளது. ஆச்சரியமாக இத்தல பெருமாளுக்கு பிரார்த்தனையாக புடவை செலுத்தப்படுகிறது. திருமணமாகாதவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டால் உடனே திருமணம் நடந்து விடுகிறது. பௌர்ணமியன்று பல சித்தர்கள் சூட்சுமமாக இந்தப் பெருமாளை வழிபடுவதாக கூறுகின்றனர்.

சென்னை  -  தரமணி

ஏழுமலையான் கோயில் கொண்ட பல்வேறு தலங்களுள் ஒன்று சென்னை தரமணியில் உள்ளது.  சென்னை -வேளச்சேரியிலிருந்து திருவான்மியூர் செல்லும் பாதையில் பாரதி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், தரமணி பேருந்து நிலையத்திலிருந்தும் 2 கி.மீ தொலைவில், ராஜாஜி தெருவில் அமைந்துள்ளது இத்தலம். ராகவபட்டாச்சாரியார் எனும் வைணவ பெரியவர் திருப்பதி திருமலையிலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்திலும் பல வருடங்களாக கைங்கரியம் புரிந்து வந்தார். வயதான காலத்தில் அவரால் திருப்பதிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட, ஏழுமலையானைத் தனது இருப்பிடத்திற்கே அழைத்துவர தீர்மானித்தார். உண்மையான பக்தனின் அழைப்பை வேங்கடவன் மறுப்பானா? பெரியவரின் விருப்பப்படியே தரமணியில் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம், 1976ம் ஆண்டு உருவாகியது.

பாதூர்

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் வடப்புறமாக பாதூர் கிராமத்தில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வைணவ பஞ்ச (ஐந்து) கிருஷ்ணாரண்ய புண்ணிய பூமியில், புனிதம் நிறைந்த, மகோன்னதமான கருட நதி, சேஷ நதிகளின் தென்புறத்தில் அமைந்துள்ளது பாதூர் திருத்தலம். இந்த ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலையும், பாதூர் கிராமத்தையும் ராஷ்டிரகூட மாமன்னன், மூன்றாவது கிருஷ்ணன் அவர்களால் கி.பி. 964ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, சரபோஜிராவிற்கு தரிசனம் தந்த, தன்னை நாடி வந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கிழக்கு பார்த்த வண்ணம் அழகாய் காட்சி தருகிறார்.

கிருஷ்ணா

Related Stories: