வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

விசுவாமித்திரருடன் கானகம் சென்ற ராம-லட்சுமணரை ஈசனின் பின்னால் செல்லும் இரு முருகன்கள் போல் தோன்றினர் என்று தன் ராமாயணத்தில் விவரிக்கிறார் வால்மீகி முனிவர்.

தட்சிணாமூர்த்தி வடிவில் தான் சனத்குமாரருக்கு செய்த உபதேசங்களை அவர் முழுமையாகக் கற்றுக் கொண்டதால், ஈசனாக தான் அவரிடமிருந்து உபதேசம் பெற விரும்பினார்.  அவரைத் திருப்திப்படுத்தவே சனத்குமாரர் முருகனாக தோன்றி  உபதேசம் செய்தார் என்பார்கள்.

ஈசனின் ஸர்வஞ்த்வம், திருப்தி, அனாதிபோதம், ஸ்வாதந்த்ரியம், அலுப்த சக்தி, அனந்த சக்தி போன்ற குணங்களே முருகனின் ஆறுமுகங்கள் என்கிறது கந்தபுராணம்.

சுவாமிநாத பெருமானை பலபட்டை சொக்கநாதப்புலவர் இரு பொருள்பட பாடிய ‘வெங்காயம் சுக்கானால்’ எனும் பாடலில் முருகனை ஏரகத்துச் செட்டியார் என அழைக்கிறார்!

ஆதித்ய ஹ்ருதய மகாமந்திரத்தில் அகத்தியர் ஆதித்யனை ‘ஸ்கந்த’ என்று முருகப் பெருமானோடு ஒப்பிடுகிறார்

இலங்கை மட்டக்கிளப்பில் உகந்தைமலை முருகன் அருள்கிறான். இங்கே முருகனுக்கு முன் மயிலுக்குப் பதில் மூஞ்சுறு பிரதிஷ்டை

செய்யப்பட்டுள்ளது வித்தியாசமானது.

யாழ்ப்பாணம் தேவபுரத்தில் கதிர்வேலாயுதசுவாமி திருவருள் புரிகிறார். இங்குள்ள உற்சவ விக்ரகங்கள் தமிழகத்தின் சுவாமிமலையில் செய்யப்

பட்டவை.

திலக ஸ்வாமி வடிவினனாக முருகனை பூஜிப்பவர்கள் காரியசித்தி பெறுவர் என யாஞ்யவல்க்ய மகரிஷி கூறியருளியுள்ளார்.

முருகப்பெருமானை உபாசிக்கும் அடியார்களுக்கு பயம், அழிவு, சத்ரு, வியாதி, இவை அனைத்துமே அண்டாது.

கந்தபுராணத்தின் ஒரு பகுதியான சங்கர ஸம்ஹிதை முருகனே ‘பரப்ரம்ஹம்’ என உறுதியாகக் கூறுகிறது. கம்பன் தன் ராமாயண யுத்த காண்டத்திலே இந்திரஜித்தை முருகனுக்கு நிகராகவே போற்றிப் புகழ்கிறார்.

முருகப்பெருமானின் ஆறு முகங்களுக்கும் ஆறு ஸஹஸ்ரநாம அர்ச்சனை மந்திரங்கள் உண்டு.

சிங்கப்பூர் டேங்க் ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி ஆலய முருகனுக்கு சீனர்கள் உட்பட பல்வேறு நாட்டு மக்கள் பக்தர்களாகத் திகழ்கின்றனர்.

பினாங்கில் தண்ணீர்மலையானாக வலது தொடையில் மரகதம் பதித்தாற்போல் மச்சமுடன் தண்டபாணி அருள்கிறான். இக்கோயில் முழுவதும் பர்மா தேக்கு மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

விராடன் மனைவி ஸ்தேஷ்ணாவின் ஆணைப்படி கீசகனின் வீட்டிற்குச் சென்ற திரௌபதி தன்னை ஆபத்திலிருந்து காக்க ருத்ரன், அக்னி, பகன், விஷ்ணு, சூர்யன், ஸாவித்ரி, பிரம்மா இவர்களோடுஸ்கந்தனையும் துதித்தாள்.

மகாபாரதத்தின் வனபர்வா, சல்யபர்வா, அனுசாசனபர்வா ஆகிய மூன்று பகுதிகளில் ஸ்கந்தனுடைய கதைகள் கூறப்பட்டுள்ளன.

பகவத்கீதையில் கிருஷ்ணர் ‘ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த:’ என்று அருளியுள்ளார்.

குமார தந்த்ரத்தில் முருகனுடைய மயிலுக்கும் காயத்ரி மந்திரம் அருளப்பட்டுள்ளது: ‘சுக்லாபாங்காய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி தந்நோ: மயூர ப்ரசோதயாத்’ என்பதே அந்த மந்திரம்.

சுப்ரமண்ய ப்ரதிஷ்டாவிதி நூலில் முருகனின் மற்றொரு வாகனமான யானை ஐராவத குலத்தில் உதித்தது, வெண்ணிறம், நான்கு தந்தங்கள் கொண்டது, மிகவும் பலமுள்ளது என விவரிக்கப்பட்டுள்ளது.

முருகனின் வேலாயுதம் சக்தி மிக்கது. ‘வேலாயுதத்திற்கு மேலாயுதமில்லை’ என்ற பழமொழியே உள்ளது.

Related Stories: