தீய சக்திகளிடமிருந்து உலகை காக்க சிவபெருமான் தனது அம்சமாக தோன்றச் செய்த தெய்வம் தான் பைரவர். சிவனிடமிருந்து மொத்தம் 64 வகையான பைரவர்கள் தோன்றியதாக சிவபுராணம் கூறுகிறது. இதில் 8 வகையான பைரவ மூர்த்திகளே பக்தர்கள் அதிகம் பேரால் வழிபடப்படுகின்றனர். அதில் ஒருவர் தான் காலபைரவர். இந்த காலபைரவருக்கு மேற்கொள்ளப்படும் காலபைரவர் விரதம் பற்றியும் அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.எந்த ஒரு மாதத்திலும், வாரத்தின் எந்த ஒரு நாளிலும் காலபைரவருக்கு விரதம் அனுஷ்டித்து வழிபடலாம். ஆனாலும் சித்திரை மற்றும் ஐப்பசி மாதத்தில் வரும் பரணி நட்சத்திர தினங்களும், மாதந்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்கள் காலபைரவர் விரதம் மேற்கொள்வதற்கு சிறந்த தினங்களாகும்.
காலபைரவர் விரதம் மேற்கொள்ளும் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டின் பூஜையறையில் இருக்கும் சிறியளவிலான காலபைரவர் படத்திற்கு செம்பருத்தி பூக்களை சமர்ப்பித்து, பால் பாயசம் நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். பின்பு உணவு ஏதும் உண்ணாமல் உங்களால் பைரவ மந்திரங்கள் துதித்து, பைரவரை சிறிது நேரம் தியானம் செய்து வழிபட வேண்டும்.பின்பு வீட்டில் பீட்ரூட் பயன்படுத்தி பீட்ரூட் சாதம், எலுமிச்சை சாதம், தேனில் ஊறவைக்கப்பட்ட உளுந்து வடை போன்றவற்றை தயாரித்து மாலையில் அருகிலுள்ள பைரவர் கோயிலுக்கோ அல்லது சந்நிதிகோ சென்று பைரவருக்கு செவ்வரளி பூக்களை சாற்றி, மேற்கூறிய நைவேத்திய பொருட்களை படைத்து, ஒரு பூசணிக்காயை இரண்டாக வெட்டி அதில் நெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி பைரவரை அவருக்குரிய மந்திரங்கள் துதித்து வணங்க வேண்டும்.
வழிபாடு முடிந்ததும் பைரவருக்கு படைக்கப்பட்ட சித்ரான்னங்கள், வடை ஆகியவற்றை கோயிலிலிருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கிய பிறகு நீங்களும் அப்பிரசாதத்தை சிறிது உண்ண வேண்டும். வீட்டிற்கு திரும்பியதும் உங்கள் பூஜையறையில் இருக்கும் பைரவரை வணங்கி, அவருக்கு நைவேத்தியம் செய்த பால் பாயசத்தை பிரசாதமாக சாப்பிட்டு உங்களின் காலபைரவ விரதத்தை முடிக்கலாம்.இந்த பைரவ விரதத்தை வருடமுழுவதும் மேற்கொள்பவர்களுக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். துணிச்சல் மற்றும் தைரிய குணம் அதிகரிக்கும். எதிரிகளே இல்லாத நிலை ஏற்படும். உங்களுக்கு எதிராக செய்யப்படும் செய்வினை, ஏவல், பில்லி சூனிய மாந்திரிகம் பலிக்காமல் போகும். கடன், வறுமை நிலை போன்றவை ஏற்படாது.