நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

பரமத்திவேலூர்: பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவினையொட்டி, பரமத்திவேலூர் காவிரி ஆற்றிலிருந்து யானை, குதிரை, பசு மற்றும் மேளதாளங்களுடன் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று தீர்த்தம் எடுத்து வந்தனர். இதையடுத்து, வாஸ்து சாந்தியும் ராஜா சுவாமி பரிவார மூர்த்திகளுடன் யாக சாலை எழுந்தருளும் நிகழ்ச்சியும், முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து திருமுறை பாராயண யாக பூஜை, பூர்ணாஹூதி, பூதசோதனம், யாகபூஜை மற்றும் விக்னேஸ்வர பூஜையுடன் நாடி சந்தானமும் நடைபெற்றது.

காலை 6 மணிக்கு மேல் புதிய தோரண வாயில் மகா கும்பாபிஷேகமும், 6ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு யாத்ரா தானம் கடம் புறப்பாடும், 8.40 மணிக்கு ராஜா சுவாமி விமான ராஜகோபுர சகித விமான கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், கிருத்திகை கட்டளைக்குழு நிர்வாகிகள் மற்றும் கோயில் குடிப்பாட்டு மக்களும் செய்திருந்தனர்.

Related Stories: