ஸ்ரீரங்கம் கோயிலில் பகல்பத்து 2ம் திருநாள் : பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோயிலில் வைகுண்ட ஏகாதசிவிழாவின் பகல்பத்து 2ம்நாளான நேற்று நம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் சேவை சாதித்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 7ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. பகல்பத்து திருவிழாவின் 2ம் நாள் விழாவான நேற்று நம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் வைர அபயஹஸ்தம், முத்துசரம், பவளமாலை, மகாலட்சுமி பதக்கம், அரைஞான் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து காலை 6.30 மணிக்கு மூலஸ்தனத்தில் இருந்து புறப்பட்டு பகல்பத்து ஆஸ்தான மண்டபமான அர்ச்சுன மண்டபத்திற்கு காலை 7 மணிக்கு வந்து சேர்ந்தார்.

அதன்பின் காலை 7.45 மணிமுதல் பகல் 1 மணிவரை அரையர் சேவையுடன் பொதுமக்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு உபயக்கார்கள் மரியாதையுடன் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன்பின் நம்பெருமாள் இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து  புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். மூலவர் பெரிய பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பொதுமக்கள் மூலவரை காலை 7 மணிமுதல் மாலை 5.30மணி வரையிலும், அதன்பின் மாலை 6.45 மணிமுதல் இரவு 9 மணிவரை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் உள்பட கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Related Stories: