விஜயவாடா ஒருகாலத்தில் மலைகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கிருஷ்ணா நதியின் படுகை தடுத்துக் கொண்டிருந்தன. அங்கு விவசாயம், செய்ய முடியாமல் மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். பல இடங்களில் வெள்ளம் புகுந்தது. மக்கள் துன்பம் அடைந்து. துர்க்கையிடம் முறையிட்டனர். இறைவனே, மக்களின் குறையை எற்று அந்த மலையைக் குடைந்து நதியிலுள்ள நீரை வெளியேறச் செய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குகை வழியே நதிநீர் வர ஆரம்பித்தது என தலபுராணம் கூறுகின்றது. அதனாலேயே இந்தப் பகுதி பெஜ்ஜவாடா என அழைக்கப்பட்டது. பெஜ்ஜ எனும் தெலுங்கு வார்த்தையின் பொருள் குகை என்பதாகும். பின்பு விஜயவாடா என திரிந்தது.
இந்த நதிக்கரையில் மருத்துவ குணமுடைய மூலிகைச் செடிகள் வளர்ந்து வருவதால் பிஜ்ஜபுரி எனவும் அழைக்கின்றார்கள். இக்கோயில் எட்டு அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்கிறார்கள். ஆந்திராவின் காவல் தெய்வமாக கனக துர்க்கா அருள்புரிகின்றாள். மகிஷாசுரனை அழித்த சந்தோஷத்தில் இத்தலத்தில் தங்க மழை பொழியச் செய்ததால் கனக துர்கா எனப் பெயர் பெற்றாள். கனக துர்க்கா எனும் பெயரில் தேவர்கள் இத் தேவியை பூஜித்து வந்தார்கள். தலம் வளர்வதற்காக அஸ்வமே யாகம் நடத்தப்பட்டது. பிரம்மா இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தார். இதனாலேயே சிவபெருமானுக்கு மல்லேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள சக்தி பீடங்களில் ஒன்றான இந்த சந்நதியில் நவராத்திரி முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. துர்காதேவி, ஸ்ரீஅன்னபூரணி தேவி, ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீலலிதா, திரிபுரசுந்தரி, மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரி, பாலசுந்தரி, சரஸ்வதி என ஒன்பது விதமாக அலங்காரம் செய்யப்படுகிறாள். ஒவ்வொரு நாளும் அன்றைய தினத்தின் நட்சத்திரத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படுகிறது. தேவி பொன்னொளி வீசுகின்றாள். சரஸ்வதி பூஜை, தெப்போற்சவம் இரண்டும் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இரவில் கோயில் கோபுரம் வண்ணமயமாக அழகுடன் பிரகாசிப்பதைக் காணலாம், நவராத்திரி அன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து கிருஷ்ணா நதிக்கரையில் நீராடி தேவியை தரிசிக்கின்றார்கள். மலையருவியில் இந்திரகீல முனிவர் தேவிக்காக காத்திருந்தார். தேவி மகிஷாசுரனை வதம் செய்து அஷ்டகரங்களுடன் மலையில் நான்கடி உயரத்தில் மகிஷாசுரன் மேல் நின்ற கோலத்தில் மகிஷாசுரமர்த்தினியாக காட்சி அளித்து தனிபெருங்குறை நீக்கி அருளினாள். இந்த மலைக்கு எல்லா தெய்வங்களும் வந்து வருகை தந்து வணங்கி தரிசனம் செய்ததாக வரலாறு கூறுகின்றது. இத்தலத்தில் தசரா திருவிழா, மஹா சிவராத்திரி, பிரதோஷம், சிரவண மாதம், 30 நாட்கள் விழா மிகச் சிறப்பாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. அன்னை கனகதுர்காவை தரிசனம் செய்து, வணங்கி வந்தால் அவளது பேரருளால் வாழ்வு வளம் பெருகும். அம்பாளுக்கு தங்கநிற அரளிப் பூமாலை அணிவித்து வழிபாடு செய்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா நகரத்தில் ஸ்ரீகனகதுர்கா தேவி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு விஜயவாடா ரயில் நிலையத்திலிருந்து 10 நிமிடத்திற்குள் சென்று விடலாம். 20 நிமிடத்திற்கு ஒருமுறை ஆலயம் செல்ல பேருந்து வசதி உள்ளது.
- ஜெயஸ்ரீ