டிராபிக் போலீஸ் அதிகாரியுடன் தகராறு: டிம்பிள் ஹயாதி மீது வழக்கு பதிவு

ஐதராபாத்: தமிழில் ‘தேவி 2’, ‘வீரமே வாகை சூடும்’ படங்களில் நடித்தவர் டிம்பிள் ஹயாதி. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஐதராபாத்தில் ஜுபிளிஹில்ஸ் பகுதியில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கிறார். இவர் விக்டர் டேவிட் என்பவரை காதலித்து வருவதாகவும் அவருடன்தான் அந்த அபார்ட்மென்ட்டில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. அதே அபார்ட்மென்ட்டில் ராகுல் ஹெக்டே என்பவர் வசிக்கிறார். இவர் ஐதராபாத் போக்குவரத்து காவல்துறையில் உதவி கமிஷனராக உள்ளார். இவருக்கும் டிம்பிள் ஹயாதிக்கும் பார்க்கிங் பகுதியில் வாகனம் நிறுத்துவதில் கடந்த சில மாதமாக தகராறு நிலவி வந்தது. பார்க்கிங் ஏரியாவுக்கு வரும் போதெல்லாம் போலீஸ் வாகனத்தை டிம்பிள் எட்டி உதைத்து விட்டு செல்வராம். இது அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய காரை டிம்பிள் எடுக்கும்போது ராகுல் ஹெக்டேவின் போலீஸ் வாகனத்தின் மீது மோதியிருக்கிறார். இதில் ராகுலின் வாகனம் சேதம் அடைந்திருக்கிறது. மேலும், அந்த வாகன டிரைவருடன் டிம்பிள் அடிக்கடி சண்டைக்கு செல்வாராம். அதனால் டிரைவர் சேத்தன் குமார், ஜுபிளிஹில்ஸ் காவல் நிலையத்தில் டிம்பிள் மீது புகார் அளித்தார். இதையடுத்து டிம்பிள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரசு வாகனத்தை வேண்டுமென்றே இடித்ததற்காகவும், தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் டிம்பிள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். நேற்று நடைபெற்ற விசாரணையில் டிம்பிள் அவரது வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். இதற்கிடையே, ‘சிலர் அதிகாரத்தை பயன்படுத்தி தங்களது தவறை மறைக்க முயல்கிறார்கள். அது நடக்காது’ என தனது சமூக வலைத்தளத்தில் டிம்பிள் ஹயாதி பதிவிட்டுள்ளார்.

The post டிராபிக் போலீஸ் அதிகாரியுடன் தகராறு: டிம்பிள் ஹயாதி மீது வழக்கு பதிவு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: