துபாயில் தனி திறன் போட்டி... இந்திய தொழிலாளர்கள் பரிசு வென்றனர்

பல்வேறு கனவுகளோடும் திறமைகளோடும் தாய் நாட்டில்  இருந்து பொருளாதார தேவைகளுக்கு வெளிநாடு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அதன்பின் தன் தனித்திறமைகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு கிடைத்த வேலையில் வாழ்க்கையை ஓட்டிச் செல்லவேண்டி இருப்பது காலத்தின் கட்டாயம். அது போன்றவர்களுக்காக துபாயில் ஆடல், பாடல் என தனித் திறமை கொண்ட ப்ளூ காலர் தொழிலாளர்களை  கண்டறிந்து மேடையேற்றி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைக்கிறது “ஸ்மார்ட் லைப் பௌண்டேசன்” எனும் தொண்டு நிறுவனம்.

அமீரகத்தில் இந்த ஆண்டிற்கான கருத்தாக்கமான “இயர் ஆப் டாலரன்ஸ்”ஐ  முன்னிலைப்படுத்தி, ஸ்மார்ட் ஐடோல்ஸ் - 2019  என்ற தனித் திறமையாளர்களுக்கான இறுதிப்போட்டியை  ஏப்ரல், 26, மாலை துபாயில் உள்ள ஷேக் ராஷித் ஆடிட்டோரியத்தில் மிக சிறப்பாக நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் போட்டியாளர்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து கலந்துகொண்டு, பலசுற்றுகள்  நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் தேர்வு பெற்றவர்களுக்கு ஒரு மாதகாலம்  அவரவர் வேலை நடுவிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பதினைந்து போட்டியாளர்கள் இடம்பெற்ற இறுதி போட்டியில் சிறந்த பாடகர் பிரிவில் முதல் பரிசு எம்.டி. ஷாஹித் அன்சாரி என்ற இந்தியருக்கும்  இரண்டாம் பரிசு ரோடல் ஜேஆர் தியோடர் பிரான்சிஸ்கோ என்ற பிலிப்பைன்ஸ் நாட்டவர்க்கும்  நடன பிரிவில் முதல் பரிசு  நிமல்கா சந்தரேனு என்ற இலங்கை நாட்டு பெண்மணிக்கும் இரண்டாம் பரிசு பிநிதா பரியார் என்ற நேபாள நாட்டு பெண்மணிக்கும் கிடைத்தது.

இது போன்று இதுவரை கடந்த ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் வென்றவர்களைக் கொண்டு ஸ்மார்ட் பேண்ட் மற்றும் ஸ்மார்ட் பீட் என்ற குழுக்களை அமைத்து அவற்றின் மூலம் அவர்களுக்கு நிரந்தர மேடை வாய்ப்புகளையும் வருமானத்தையும் இந்நிறுவனம் அமைத்து தந்துள்ளது. இந்த குழுவினரின் ஆடல், பாடல் பங்களிப்பு, பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது

கலந்து கொண்ட போட்டியாளர்கள், சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிக்காட்டியதால் தேர்வு செய்வதில் சிரமம் இருந்ததாக நடுவர்கள் பாலிவுட் நட்சத்திரம் கல்பனா ஐயர், சோம் தத்தா பாசு, ஆல்வின் பன்சிடோ ஆகியோர் தெரிவித்தனர். இருப்பினும் அவர்கள் மேடையில் பரிமளிக்கும்போது செலுத்திய ஈடுபாடு, முக பாவனைகள் போன்றவற்றைக் கொண்டு அவர்களுக்கு மதிப்பெண் அளிக்கப்பட்டது என்றும் அனைவரும் சிறந்த கலைஞர்கள் என்றும் பாராட்டினர்.

விழாவை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த “ஸ்மார்ட் லைப் பௌண்டேசன்” தலைவி திருமதி. மஞ்சுளா ராமகிருஷ்ணன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உறுதுணையாக நின்ற அனைத்து திட்ட மேலாளர்களும்  சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டு விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்.

பல்வேறு தொழிலாளர் முகாம்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்திருந்து நிகழ்ச்சியை கண்டுகளித்து பங்குபெற்றோரை உற்சாகப்படுத்தினர். அமீரகத்தில் ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் கோடையில்  மழை என்றால் அது மிகை இல்லை.

Related Stories: