துபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது

துபாய்:  அதிகளவில் ரத்ததானம் தொடங்கி தற்போதைய கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரண உதவி வழங்கும் முயற்சி என பல்வேறு சமூக நல பணிகளின் ஈடுபடும் அமைப்பாக துபாயில் அரசு பதிவு பெற்ற தமிழகத்தை சேர்ந்தோரை நிர்வாகிகளாக கொண்ட அமைப்பாக ஈமான் கல்சுரல் செண்டர் செயல்பட்டு வருகிறது

இந்த அமைப்பு கடந்த 1976-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. துபாய் அரசு சமூக சேவை அமைப்புகளை முறைப்படுத்த புதிய சட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தது. அப்போது பதிவு பெற்ற ஒரே தமிழ் அமைப்பாக ஈமான் கல்சுரல் செண்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், பொதுச்செயலாளராக ஏ. ஹமீது யாசின், துணைத்தலைவராக முஹம்மது மஹ்ரூப், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளராக முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளராக திண்டுக்கல் ஜமால் முஹைதீன்,இஸ்லாமியா விழாக்குழு செயலாளர் சாதிக், கல்விக்குழு செயலாளராக திருச்சி பைசுர் ரஹ்மான், ஆடிட்டராக நாகூர் ரவூப், அலுவலக மேலாளராக தேவிபட்டிணம் நிஜாம் அக்பர் அலுவலக செயலாளர் யாகூப் மற்றும் நிர்வாகிகள் இருந்து வருகின்றனர்.

துபாய் அரசின் சமூக நலத்துறை சார்பில் ஈமான் அமைப்பு சிறப்பான சேவைக்கான விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக துபாய் அரசு துறை அதிகாரிகள்  ஹுதா அல் புஸ்தகி மற்றும் சம்மா அல் அக்பாபி உள்ளிட்டோர் ஈமான் அமைப்பிடன் தெரிவித்தனர்.  அதன் பின்னர் அந்த விருதை ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் அவர்களிடம் வழங்கினர். அப்போது பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், ஆடிட்டர் நாகூர் ரவூப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது பேசிய அதிகாரி, துபாயில் சமூகப் பணிகள் ஈடுபட்டு வரும் பொது நல அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் என 100 பேரை தேர்வு செய்து இந்த சமூகப் பணிக்கான விருதை வழங்கி வருகிறோம்.

இதில் தேர்வு செய்யப்பட்ட ஒரே அமைப்பு ஈமான் கல்சுரல் செண்டர் மட்டுமே ஆகும். இந்த அமைப்பு ரத்ததான முகாம், மருத்துவ முகாம், தொழிலாளர்களுக்கு உதவிகள் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தாலும் ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்காக ஐந்தாயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு நோன்புக் கஞ்சி வழங்கும் பணியில் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வருவதன் காரணமாக இந்த விருதுக்கு முக்கியமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உங்களின் பணிகள் இன்னும் சிறப்புடன் தொடர எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.

துபாயில் அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் சர்வதேச நாடுகளின் சமூக நல அமைப்புகளில் சிறந்த சேவை அமைப்பாக தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு இந்திய சமூக நல அமைப்பு ஈமான் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories: