குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக குற்றாலத்தில் 2 நாட்களாக சாரல் பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று காலை அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கடந்த ஐந்து தினங்களாக இதமான சூழலுடன் பகல் மற்றும் இரவு வேளைகளில் சாரல் நன்றாக பெய்து வந்த போதும் மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாத காரணத்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாகவே இருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலையில் குற்றாலம் மற்றும் தென்காசி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.