அரசு தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் பிரமிளா மலர்கள்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள பிரமிளா மலகோடிஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த ஆண்டு கோடை விழா மே மாதம் நடக்கும் உள்ளது. இதற்காக அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக துவங்கிய நடவு பணிகள் கடந்த மாதத்துடன் நிறைவடைந்தது. தற்போது அனைத்து பாத்திகளிலும் மலர் செடிகள் துளிர்விட்டுள்ளன. ஒரு சில செடிகளில் மலர்கள் பூத்துள்ளன.

பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள பிரமிளா மலகோடிஸ் மலர் செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துள்ளன. பூங்காவின் பிற பகுதிகளில் மலர்கள் இல்லாத நிலையில் இந்த மலர்களை கண்டு ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள் அதன் அருகே நின்று புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர். இம்முறை மலர்களுக்கு தேவையான தண்ணீர் உள்ள நிலையில், சற்று முன்னதாகவே மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதமே மலர்கள் பூக்க வாய்ப்புள்ளது. இதனால், மலர் கண்காட்சிக்கு முன்னதாக வரும் சுற்றுலா பயணிகள் மலர்களை கண்டு ரசிக்கலாம்.

Related Stories: