12 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் குஷி

தேனி : தண்ணீர் வரத்து குறைந்தததால் சுருளி அருவியில் 12 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் சுருளி அருவி உள்ளது. ஹைவேவிஸ், மேல்மணலாறு, வெண்ணியாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பெய்து வரும் கனமழை காரணமாக சுருளி அருவியில் தண்ணீர் கொட்டியது. இதனால் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் ஆக.14ம் தேதி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

அத்துடன் படிக்கட்டுகளில் செல்வதற்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

சுருளி அருவியின் மழை வெள்ளப்பகுதியாக உள்ள ஹைவேவிஸ் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை இல்லாததால், வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் 12 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் நேற்று குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளனர்.

Related Stories: