கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள கல்லட்டி மலைப்பாதையில் உள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் மலைப்பாதையில் 19வது கொண்டை ஊசி வளைவில் கல்லட்டி பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்குட்பட்ட சோலூர், காமராஜ் சாகர் அணை மற்றும் தலைகுந்தா பகுதியில் மழை பெய்தால் இந்த நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். வனப்பகுதிக்கு நடுவே நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது தொலைவில் இருந்து பார்க்கும் போது ரம்மியமாக இருக்கும்.  

கல்லட்டி மலைப் பாதை வழியாக கூடலூர், மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு சென்று கண்டு ரசிப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த மாதம் சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வருவது அதிகரித்துள்ளது. மேலும் காமராஜர் சாகர் அணையில் இருந்தும் திறக்கப்படும் தண்ணீரும் கல்லட்டி மலைப்பாதை வழியாக வருகிறது. இதனால் தற்போது கல்லட்டி நீர்வீழ்ச்சியில்  தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் கல்லட்டி நீர்வீழ்ச்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

Related Stories: