தென்காசி: குற்றாலம் அருவிகளில் குறைவின்றி தண்ணீர் வரும் நிலையில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் ஆரவாரமின்றி குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் கடந்த வாரம் பெய்த திடீர் மழையால், வறண்டு கிடந்த அருவிகளில் தண்ணீர் விழத் துவங்கியது. இதனிடையே நேற்று முன்தினம் இரவில் பெய்த பலத்த மழையால் அருவிகளில் தண்ணீர் சிறிதளவு அதிகரித்தது. இதனால் மெயினருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுந்தது.
ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் ஓரளவுக்கு தண்ணீர் விழுந்தது. அதே வேளையில் பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவிகளில் குறைவாக தண்ணீர் விழுந்தது. கோடை காலத்திலும் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுவது குறித்து தகவலறிந்த சுற்றுலா பயணிகள் விடுமுறை தினமான நேற்று அதிக அளவில் வருகை தந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இதனிடையே நேற்று மதியம் வரை வெயில் சுட்டெரித்த போதும், மதியத்திற்கு பிறகு சற்று இதமான சூழல் நிலவியது. மாலையில் நிலவிய மேக மூட்டம் பயணிகளுக்கு இதமளித்தது.