வனஉயிரினங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

தேன்கனிக்கோட்டை, மார்ச் 28: தேன்கனிக்கோட்டை அருகே, அரசு பள்ளி மாணவர்களுக்கு வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஓசூர் வனக்கோட்டம், காவேரி தெற்கு வனஉயிரின சரணாலயம், அஞ்செட்டி வனச்சரகம், காவிரி கரையோரம் அமைந்துள்ள பிலிகுண்டுலு சூழல் சுற்றுலா மையத்தில், அஞ்செட்டி, கேரட்டி மற்றும் பிலிகுண்டுலு கிராமங்களில் உள்ள 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வனம் மற்றும் வனஉயிரினங்கள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதையொட்டி, மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், காலையில் வனத்துறை வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர்.

ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள பல்வேறு வகையான வனஉயிரினங்களின் வகைகள், அவைகளினால் ஏற்படும் பயன்கள் குறித்து, ஓசூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன் விளக்கினார். மேலும், காவேரி தெற்கு வனஉயிரின சரணாலயத்தின் சிறப்பு, அங்கு வாழ்ந்து வரும் வன உயிரினங்கள் மற்றும் அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்து அஞ்செட்டி வனச்சரக அலுவலர் சீதாராமன் விவரித்தார். பிலுகுண்டுலு அரசு தலைமை ஆசிரியர், பிலிகுண்டுலுவில் வசிக்கும் மலைவாழ் மக்கள், வனங்களின் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

வனத்துறை அலுவலர்களால் அன்புக்கரங்கள் அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவியுடன், மாணவ,மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள், ஓவிய போட்டிகள், யோகா பயிற்சி, ஓரிகாமி மூலம் தாள்களில் பொம்மைகள் செய்து வனங்களை பாதுகாப்பது குறித்து விளக்கப்பட்டது. தென்னிந்தியாவில் வாழும் பறவைகளை இனங்கண்டறிதல் தொடர்பான கையேடுகள் வழங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அஞ்செட்டி வனச்சரக அலுவலர், வனவர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

Related Stories: