சேலம், மார்ச் 27: சேலம் மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவையை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார். அதன்படி, சூரமங்கலம் உதவி வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் தமிழ்மணி, வீரக்குமார் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் செவ்வாய்பேட்டை சந்தைபேட்டைக்கு சென்றனர்.
அங்கு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல், பாக்கி வைத்துள்ள 14 கடைகளை பூட்டி அதிரடியாக சீல் வைத்தனர். மேலும் சில கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற மண்டலங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாத கடைகளிலும் சீல் வைக்கப்படவுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில், வாடகை செலுத்தாத கடைகள் கண்டறியப்பட்டு பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதன் பின்னரும் வாடகை செலுத்தாததால், கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. புதிய பஸ் ஸ்டாண்டில் வாடகை செலுத்தாத 20கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும்,’’ என்றனர்.