அக்னிவீர் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி, மார்ச் 27: அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக, திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து வரும் 31ம் தேதி வரை இணைய வழியாக (https://agnipathvayu.cdac.in) விண்ணப்பிக்க இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இணையவழித் தேர்வு வரும் மே 20ம் தேதி நடத்தப்படும்.

விண்ணப்பதாரர்கள் 2002ம் ஆண்டு டிசம்பர் 26 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாகவும், 2006ம் ஆண்டு ஜூன் 26 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 செ.மீ உயரமும், பெண்கள் 152 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளில் தேர்வு நடைபெறும். இந்திய விமானப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றலாம். அக்னிவீர் திட்டத்தின் கீழ், இந்தாண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே, அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு, 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

இத்திட்டம் குறித்த வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, வரும் 29ம் தேதி காலை 11 மணியளவில், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 04343-291983 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: