₹2 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கு நவீன மையம்

சேலம், மார்ச் 23: சேலம் அரசு மருத்துவமனையில் ₹2 கோடியில் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அதிநவீன சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் சார்பில் இதற்கான ஒருங்கிணைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சேலம் அரசு மருத்துவமனைக்கு சேலம் மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதை கருத்தில் கொண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இங்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு, இருதயம், நரம்பியல், புற்றுநோய், உள்ளிட்ட 37 துறைகளின் கீழ் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள் மற்றும் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் தீர்க்கும் மையாகவும் சேலம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினமும் 80க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். ஒவ்வொரு மாதமும் சாரசரியாக 1,500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை மருத்துவர்களும், முழுமையான மையமும் இல்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹீமோதெரபி, ரேடியோ தெரபி, அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அனைத்து வசதிகளும் கொண்டு வரப்படுவதால் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக மாறி வருகிறது.

மேலும், புற்றுநோய் பிரிவினை நவீனப்படுத்தும் வகையில் லீனியர் கருவி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்வது குறையும். மேலும், புற்றுநோய் அறிகுறிகள் கண்டறிய சிறப்பு பரிசோதனைகள், முகாம்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்தும் உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, புற்றுநோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கும் வகையில் ரேடியோதெரபி அதிநவீன சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த சிகிச்சை மையத்திற்காக கட்டுமான பணிக்காக ₹2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன சிகிச்சை மையத்திற்கான பணிகளை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தினர் மேற்கொள்கின்றனர். அதிகாரிகள் இதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து விழிப்புணர்வுகள், சிகிச்சை முறைகள் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேடியோ தெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு உடலின் உள் பகுதிகளில் கட்டிகள் இருக்கும். இதனை கண்டறிந்து சிகிச்சையளிக்க பிராச்சிதெரபி அளிப்பதன் மூலம் புற்றுநோயை குணப்படுதத முடியும். இதற்காக புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. புற்றுநோயை கண்டறியும் லீனியர் கருவி அமைப்பதற்கான கட்டுமான பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இரண்டும் பயன்பாட்டுக்கு வரும் போது, புற்றுநோயாளிகள் சிகிச்சைக்காக வெளியூர் சென்று அலைய தேவையில்லை,’’ என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவு ஒருங்கிணைந்த மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் ரேடியோ தெரபியில்  அதிநவீன சிகிச்சையளிக்க மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக காசநோய் ஆய்வக கட்டிடத்தை இடித்து விட்டு, புதியதாக ₹2 கோடியில் கட்டிடம் கட்டப்படுகிறது. கருவிகள் கொள்முதலுக்கு தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன சிகிச்சை மையம் கட்டுமான பணிகள், கருவிகள் அமைக்கும் பணி என அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது,’’ என்றனர்.

Related Stories: