கரும்பை வெளிச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை

தர்மபுரி, செப்.29: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பு 2022-2023ம் ஆண்டு அரவை பருவத்திற்கு பதிவு செய்யப்பட்ட பதிவு கரும்பைஇ ஆலை விதிகளுக்கு புறம்பாக எடுத்துச்செல்ல சில இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் ஆலை உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இது சட்டப்படி குற்றமாகும். இதனால் ஆலைக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது. சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை, முறைகேடான வகையில் வெளிச்சந்தையிலோ அல்லது வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கோ விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கும் ஆலை நிர்வாகத்திற்கும் புகார்கள் வருகின்றன. இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபடும் சங்கத்தினர்கள், இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் ஆலை உரிமையாளர்கள் மீது, கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆலை பகுதிக்கு உட்பட்ட பதிவு செய்யாத கரும்பை எடுத்து செல்பவர்கள், உரிய கோட்ட கரும்பு அலுவலரிடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும். அதன்பிறகே, தங்களது கரும்பை வாகனங்களில் ஏற்றி செல்லவேண்டும். அவ்வாறு உரிய ஆவணங்கள் இன்றி, கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களை போலீசார் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: