கிருஷ்ணகிரி, செப்.26: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது. மாவட்டத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அச்சமின்றி பணியாற்றிடவும், மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர். அதன்படி கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கிய போலீஸ் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை டி.எஸ்.பி., தமிழரசி துவக்கி வைத்தார். போலீசார் பெங்களூர் சாலை வழியாக தாலுகா அலுவலகம் வரை சென்று பின்னர் மீண்டும் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தனர். இதில், டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன், எஸ்.ஐ.,க்கள் சிவசந்தர், நவுசாத், பார்த்தீபன், தாலுகா அமர்நாத், போக்குவரத்து எஸ்.ஐ., சீதாராமன் உள்பட 54 போலீசார் கலந்து கொண்டனர். இது குறித்து டி.எஸ்.பி., தமிழரசி கூறுகையில், பொதுமக்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் என்பதற்காக போலீஸ் கொடி அணி வகுப்பு நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக போலீசார் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எந்த பிரச்சனை என்றாலும் உடனே புகார் தெரிவிக்கலாம் என்றார். இதே போல், காவேரிப்பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர் ஆகிய பகுதிகளிலும் போலீசார் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடந்தது.