பென்னாகரம், ஆக.8: ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க தடை நீடிக்கிறது. இதனால், நேற்று காலை சுற்றுலா வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி பிற்பகல், ஒகேனக்கலுக்கு விநாடிக்கு 2.40 லட்சம் கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை நிலவரப்படி, தமிழக -கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வழியாக விநாடிக்கு 1.40 லட்சம் கனஅடி தண்ணீர், ஒகேனக்கல் நோக்கி பெருக்கெடுத்து வந்தது. அதேவேளையில், சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவதற்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது.