வேம்புகுடியில் இணைப்பு மேம்பாலம் அமைக்ககோரி மக்கள் சாலை மறியல்

தா.பழூர், ஜன.24: அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே உள்ள வேம்புகுடி கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை பணிகள் ரூ.ஆயிரத்து 540 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த வேம்புகுடி கிராமத்தை இணைக்கும் கிராம சாலையில் பொதுமக்கள் சாலையை பாதுகாப்பாக கடக்கும் விதமாக புதிதாக இணைப்பு மேம்பாலம் அமைக்ககோரி, 4 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிளிடத்தில் மனு அளித்திருந்தனர். ஆனால் பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்ததது. இதில் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் சாலைப்பணிகள் நடைபெறும் இடம் முன்பு 50க்கும் மேற்பட்டோர் திரண்டு திடீர் சாலை மறியல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் கோபி போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அக்கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றது. ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்படவில்லை.

Related Stories: