பொங்கலையொட்டி அஞ்சல் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை

கிருஷ்ணகிரி, ஜன.9:கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் வரும் 10ம் தேதி (நாளை) முதல் 13ம் தேதி வரை பொங்கலை முன்னிட்டு தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஒருவர் ஒரு கிராம் முதல் நான்காயிரம் கிராம் வரை வாங்கலாம். ஒரு கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ₹4,786 ஆகும். தங்கப்பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகளாகும். இதன் இறுதி தேதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்புக்கு தங்கப்பத்திரங்களை பணமாக மாற்றிக்கொள்ளலாம். அதே வேளையில் தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்கப்பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு மத்திய ரிசர்வ் வங்கி மூலமாக 2.5 சதவீத வட்டி கணக்கிட்டு ஒவ்வொரு 6 மாதத்திற்கும் முதலீட்டாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும். இது முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயாகும். இத்திட்டத்தில் பணம் செலுத்தும் நபர்களுக்கு முதலில் அஞ்சலக ரசீதும், 20 நாட்களுக்குப் பிறகு தங்கப்பத்திரமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர ஆதார் எண், பான் எண், வங்கிக்கணக்கு ஆகியவை மிகவும் அவசியம். தங்கப்பத்திரங்களை வைத்து பணம் தேவைப்படும் போது வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த பொங்கல் பண்டிகையை தங்கப்பத்திரத் திட்டத்தில் சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: