கிருஷ்ணகிரி, ஏப்.23: பையூரில் மா, தென்னை மற்றும் வாழையில் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் கண்காட்சி நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண் பயிலும் மாணவர்கள் தங்கி பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர். அவர்கள் பையூரில் மா, தென்னை, வாழையில் மதிப்பு கூட்டுப்பொருட்கள் கண்காட்சியினை நடத்தி, விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். அதன்படி, மாவில் மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாங்காய் மிட்டாய்கள், ஜாம் மற்றும் ஜெல்லி, மா ஊறுகாய், மா பழச்சாறு, மாவடு போன்ற பொருட்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். மேலும் உதிரும் மா பிஞ்சுகளை பயன்படுத்தி உரம் தயாரிப்பதற்கும், மாங்காயில் சிறுதொழில் தொடங்கும் வகையில் மா ஊறுகாய் பாக்கெட்டுகள் செய்வதற்கும் செயல் விளக்கம் அளித்தனர்.