வருசநாடு அருகே சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
வருசநாடு, ஏப். 20: வருசநாடு அருகே, மழையால் சின்னச்சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள சின்னச்சுருளி அருவி மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த சில தினங்களாக சின்னச்சுருளி அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில், பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சின்னச்சுருளி அருவிக்கு நேற்று வந்திருந்தனர். ஆனால், குளிக்க அனுமதி இல்லாததால் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விரைவில் வனத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சுற்றுலாப்பயணி மரியசெல்வம் கூறுகையில், ‘சின்னச்சுருளி அருவியில் குளிப்பதற்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும். அருவிக்கு வரும் பெண்களுக்கு போலீசார் மற்றும் வனத்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.