கொரோனா பரவல் எதிரொலி மேட்டூர் அணை பூங்கா மூடல்

மேட்டூர், ஏப். 20: கொரானா தொற்று பரவலை அடுத்து மேட்டூர் அணை பூங்கா மூடப்பட்டது. சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மேட்டூர் அணை பூங்கா திகழ்கிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து செல்வது வழக்கம். பூங்கா நுழைவு கட்டணமாக பொதுப்பணித்துறை சார்பில் ₹5 வசூலிக்கப்படுகிறது. பார்வையாளர்களை கவர மான் பண்ணை, பாம்பு பண்ணைகள் உள்ளன. சிறுவர்களை மகிழ்விப்பதற்காக சறுக்கல், ஊஞ்சல் போன்றவைகளும் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து செல்வார்கள். பின்னர் பூங்காவில் குடும்பதுடன் உணவருந்தி செல்வார்கள். உள்ளுர் மக்கள் மட்டுமின்றி நாமக்கல், ஈரோடு, தர்மபுரி போன்ற வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணை பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். இதனால் கொரானா பரவல் அதிகரிக்கும் என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கொரானா பரவலை தடுக்க தமிழக அரசு உத்திரவின் பேரில் மேட்டூர் அணை பூங்கா நேற்று மாலை 6 மணிக்கு மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: