சுசீந்திரம், ஏப்.20: மணக்குடி கடலில் நண்பர்களுடன் குளித்த போது மாயமான கல்லூரி மாணவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். அவரது மகன் மணிகண்டன் (18). கோணம் அரசு பாலிடெக்னிக்கில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் தனது நண்பர்கள் 5 பேருடன் மணக்குடி தூண்டில் வளைவு பகுதியில் கடலில் குளித்துள்ளார். அப்போது திடீரென ராட்சத அலை ஒன்று எழுந்தது. இதில் 6 பேரும் அலையில் சிக்கி தவித்தனர். எதிர்பாராதவிதமாக மணிகண்டனை மட்டும் ராட்சத அலை இழுத்து சென்றது. மற்ற 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது குறித்து உடனடியாக சுசீந்திரம் காவல் நிலையம், குளச்சல் கடலோர காவல்படை ஆகியவற்றுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சுசீந்திரம் போலீசாரும், கடலோர காவல் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.