தமிழகத்தில் சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்குவதே என் நோக்கம்

கோவை,  ஏப்.19:  தமிழகத்தில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே என் நோக்கம் என முன்னாள் இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் ராமன் விஜயன் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா பகுதியில் ராக்ஸ் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியுடன் இணைந்து விஜயன் சாக்கர் ஸ்கூல் ஹை பெர்பாமன்ஸ் சாக்கர் பயிற்சி மையம் நேற்று துவங்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் ஆர்.வி.எஸ்.எஸ். உரிமையாளர் மற்றும் முன்னாள் இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் ராமன் விஜயன் கலந்து கொண்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:  தமிழகத்தில் திறமைவாய்ந்த கால்பந்து வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இதற்காக 2007 ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அவ்வகையில், ராக்ஸ் பள்ளியில் கல்விக்கு மட்டும் அல்லாது விளையாட்டிற்கும் அதிகளவு முக்கியத்துவம் அளித்து பயிற்சி அளிக்க உள்ளோம். மாணவர்களுக்கு கல்வியுடன் கூடிய நல்ல பண்பு மற்றும் பொறுப்புணர்வு விடாமுயற்சி ஆனது விளையாட்டுத் திறன் மூலம் வெளிப்படுகிறது.

இந்த சாக்கர் பயிற்சியின் மூலம் வீரர்களின் திறனை முழுமையாக வெளிக்கொணர்ந்து, சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே இப்பயிற்சியின் நோக்கம். மேலும், கால்பந்து விளையாடுவதால் உடல் வலிமையையும், மன நலமும் சீராக்குவதுடன் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான ஐ.லீக்ஸ், ஐ.எஸ்.எல் மற்றும் தேசிய அளவிலான பிரிவுகளுடன் விளையாட சிறந்த வளர்ச்சி மையமாக இப்பயிற்சி மையம் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: