பவானி அரசு மருத்துவமனையில் கொேரானா தடுப்பூசி இல்லை

பவானி,  ஏப். 19:   பவானி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்  கொரோனா தடுப்பூசி மருந்து இல்லாததால், மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையில்  நாளொன்றுக்கு 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்நிலையில், தடுப்பூசிக்கு தமிழகமெங்கும் பற்றாக்குறை ஏற்பட்டதால், கடந்த 2  நாட்களுக்கு முன்பு 50 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத் தொடர்ந்துஅரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தடுப்பூசி மருந்து இல்லாததால், ஒருவருக்குக்  கூட தடுப்பூசி போடவில்லை.

இதேபோன்று, ஜம்பை வட்டாரத்துக்குட்பட்ட ஜம்பை,  மைலம்பாடி, பெரியபுலியூர், ஓடத்துறை உள்பட 6 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு  சேர்த்து 150 தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இவை ஓரிரு மணி  நேரங்களில் தீர்ந்து விட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக தடுப்பூசி  போடும் பணி நிறுத்தப்பட்டது. மேலும், தொழில் நிறுவனங்களில் மொத்தமாக  கணக்கீடு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியும்  பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு சுகாதாரத்துறை அலுவலகத்திலிருந்து தடுப்பூசி  மருந்துகள் கிடைத்தால், மட்டுமே பொதுமக்களுக்கு தடுப்பூசி மீண்டும்  போடப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால், கொரோனா 2ம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் தடுப்பூசி மருந்துகள்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: