விருதுநகர், ஏப்.19: விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம் செழித்திருந்த நிலையில், பருவமழை பெய்ததால் விவசாயத்தை கைவிட்ட விவசாயிகளும், விவசாய கூலிகளும் மாற்று தொழில் தேடி இடம் பெயர்ந்தனர். தீப்பெட்டி, பட்டாசு தொழிலுக்கு மாறிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில் பாதிப்பால் வாழ்வாதாரத்தை தொலைத்து வேலையின்றி திரியும் அவல நிலை தொடர்கிறது. விவசாயத்தை பலர் கைவிட்டாலும், சிலர் தங்களது குலத்தொழிலை விட்டு, விட்டு என்ன செய்வது என தெரியாமல் லாபமோ, நஷ்டமோ தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். கோடையில் காய்கறி விவசாயம் செய்யப்படும் நிலையில், கத்தரிக்காயை தவிர பிற நாட்டு காய்களான வெண்டை, தக்காளி, சீனிஅவரை உள்ளிட்ட காய்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. கடந்த இரண்டு மாதமாக தக்காளி 5 கிலோ ரூ.50, ரூ.40 என லோடுவேன்களில் வைத்து கூவி, கூவி விற்று வருகின்றனர். தக்காளிக்கு விலையில்லாத நிலையில், வியாபாரிகள் விவசாயிகளிடம் தக்காளி கிலோ ரூ.5 க்கும் குறைவான விலை கொடுத்து வாங்குகின்றனர். உரிய விலை கிடைக்காமல், தக்காளி பறிப்பு கூலிக்கு கூட கட்டுபடியாகாதால் செடிகளிலேயே தக்காளி விடப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் விருதுநகரை சுற்றிய தாதம்பட்டி, அழகாபுரி, மீசலூர் பகுதி கிராமங்களில் தக்காளி நூற்றுக்கணக்கான ஏக்கரில் தக்காளி செடிகள் சாய்ந்த அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.