பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த பயிற்சி

சிவகங்கை, ஏப்.19: சிவகங்கையில் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்யும் டீலர்களுக்கான இடு பொருட்கள் விற்பனை தொடர்பான பயிற்சியில் பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்யும் டீலர்களுக்கான இடு பொருட்கள் விற்பனை தொடர்பான 48 வார பயிற்சி நடந்து வருகிறது. 9வது வார பயிற்சியில் மதுரை வேளாண்மைக் கல்லூரி பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் சுரேஷ் பயிற்சியளித்தார். இதில் பயிர்களை தாக்கும் பல்வேறு வகையான பூச்சிகள் குறித்த முழுமையான விபரங்கள், பூச்சிகளின் பருவங்கள், வகைகள், சாறு உறிஞ்சும் பூச்சிகள், தத்துப் பூச்சிகள், அசுவினி, மாவுப் பூச்சிகள், வெள்ளைஈ, செதில் பூச்சிகள், இலை உண்ணும் பூச்சிகள், துளைப்பான்கள், மண்ணிலிருந்து தாக்கும் பூச்சிகள், சேமிப்புகிடங்கில் உள்ள பூச்சிகள் குறிப்பாக நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், கரும்பு, நிலக்கடலை, பருத்தி போன்ற பயிர்களை தாக்கும் பூச்சிகள், தாக்குதலின் அறிகுறிகள் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன், துணை வேளாண்மை இயக்குநர் கதிரேசன், வேளாண்மை உதவி இயக்குநர்(தரக்கட்டுப்பாடு) பரமேஸ்வரன், வேளாண்மை அலுவலர் கருணாநிதி மற்றும் ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் மற்றும் டீலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: