திண்டுக்கல் ரயில் நிலையத்தில் செயல்படாத டிஜிட்டல் பலகை பயணிகள் சிரமம்

திண்டுக்கல் ஏப்.19: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை தெரிவிக்கும் டிஜிட்டல் பலகை செயல்படாததால் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கிறது. இங்கு 6 நடைமேடைகள் உள்ளன. இதில் ரயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை தெரிவிப்பதற்கு டிஜிட்டல் பலகை வைக்கப்பட்டுள்ளது. ரயில் வரும் போது பெட்டிகளின் எண் அந்த டிஜிட்டல் பலகையில் ஒளிரும். இதனால் பயணிகள் தேவையான பெட்டியை அறிந்து ஏறி கொள்வர். இந்த டிஜிட்டல் பலகைகள் பராமரிப்பு தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிஜிட்டல் பலகைகள் முறையாக பராமரிப்பு செய்யாததால் கடந்த சில மாதங்களாக அவை செயல்படவில்லை. இதனால் ரயில் பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும் என்பதை அறிய முடியாமல் பயணிகள் தவித்தனர். குடும்பத்துடன் வெளியூர் செல்வோர் பெரும் சிரமப்பட்டனர். எனவே, பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிஜிட்டல் பலகைகளுக்கு அருகில் பெட்டிகளின் நிலையை குறிப்பிட்டு ஸ்டிக்கர் பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனை பயணிகள் பார்த்து அந்தப் பெட்டியில் ஏறிக் கொள்ளலாம். இது ரயில் பயணிகளுக்கு ஆறுதல் அளிக்கிறது. அதேநேரம் டிஜிட்டல் பலகைகளை சரிசெய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: