புளியங்குடி, ஏப்.19: புளியங்குடியில் கொரோனா 2ம் அலை பரவுவதை தொடர்ந்து சுகாதார பணிகள் தீவிரமாகியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டு புளியங்குடி பகுதிகளில் தான் கொரோனா தொற்று அதிகளவில் பரவ தொடங்கியது. இதனால் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு மெயின் ரோடுக்கு வரும் அனைத்து பாதைகளும் தகரத்தால் அடைக்கப்பட்டன. கடைகள் அனைத்தும் மூடப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் பொருட்களும் வீடுகளுக்கே டெலிவரி செய்யப்பட்டன. கொரோனா தொற்று குறைந்தவுடன் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. தற்போது 2ம் அலை பரவலை தொடர்ந்து புளியங்குடியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. நேற்று வரை சுமார் 19பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.