கொரோனா 2வது அலை தீவிரம் திருமண மண்டபம், தியேட்டர்களில் கட்டுப்பாடு

கிருஷ்ணகிரி, ஏப்.18: கொரோனா 2வது அலை பரவி வருவதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமண மண்டபம் மற்றும் தியேட்டர்களில் ஒருசில கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது என ஆர்டிஓ தலைமையில நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரியில் திருமண மண்டபங்கள், தியேட்டர்களின் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் கற்பகவள்ளி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி தாசில்தார் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் சந்திரா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் உள்ள 37 திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள், தியேட்டர்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது, கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளதையும், அரசுகளின் வழிகாட்டுதல்களையும் விளக்கி கூறி, மண்டபங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே சமூக இடைவெளியுடன் பங்கேற்க வேண்டும்.

தியேட்டர்களிலும், அரசு வழிகாட்டுதலின்படி, சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்க வேண்டும். அனைவரையும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அனைவரும் முகக்கசவம் அணிய வேண்டும். சானிடைசர், கைகழுவும் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். தியேட்டர்களில் இடைவேளை நேரங்களில் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும். அதே போல் 45 வயதிற்கு மேல் உள்ள பணியாளர்கள் தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மண்டபம் மற்றும் தியேட்டர்களில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவைகளையும் கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

Related Stories: