பேன்சி கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்து ரூ.3 லட்சம் திருடிய பெண்

ஈரோடு,  ஏப். 18: ஈரோட்டில் பேன்சி ஸ்டோர் கடையில் பொருட்கள் வாங்குவது போல்  நடித்து ரூ.3 லட்சம் திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி  வருகின்றனர். ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர்  பிரகாஷ் (43). இவர் ஈரோடு கொங்காலம்மன் கோவில் வீதியில் லலிதா பேன்சி ஸ்டோர்  கடை வைத்து நடத்தி வருகிறார். பிரகாஷ் நேற்று முன்தினம் ரூ.3 லட்சம்  ரொக்கத்தை வீட்டில் இருந்து எடுத்து வந்து கடையில் கல்லா பெட்டிக்கு  அருகில் ஒரு பையில் சுருட்டி வைத்திருந்தார். அப்போது கடைக்கு பொருட்கள்  வாங்குவதைபோல சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகக்கவசம் அணிந்தபடி  வந்து விலை கேட்டுள்ளார். அவர் அப்பெண் கேட்ட பொருளை எடுப்பதற்காக உள்ளே  சென்றபோது, அந்த பெண் அங்கிருந்து சென்று விட்டார். மேலும், கல்லா  பெட்டிக்கு அருகில் வைத்திருந்த ரூ.3 லட்சமும் மாயமாகியிருந்தது. இதனால்,  அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் பக்கத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த  சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்வையிட்டார். அப்போது, கடைக்கு வந்த பெண்  பொருட்கள் வாங்குவதைபோல வந்து கடையில் இருந்த ரூ.3 லட்சத்தை திருடி, அவரது  பையில் போட்டு எடுத்து சென்றது பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் ஈரோடு  டவுன் காவல் நிலையத்தில் பிரகாஷ் நேற்று புகார் அளித்தார். இந்த  புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பணத்தை திருடி சென்ற பெண்ணை தேடி  வருகின்றனர்.

Related Stories: