பார்வையாளர்கள் வருகை குறைவு வெறிச்சோடிய வண்டலூர் பூங்கா

கூடுவாஞ்சேரி, ஏப். 17: கொரோனா பரவல் எதிரொலியால் குறைந்த அளவே பார்வையாளர்கள் வருகின்றனர். இதனால், வண்டலூர் உயிரியல் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், கரடி, யானை, மான்கள் உள்பட அரிய வகை விலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன. இதனை காண தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதில், கோடைகாலத்தில் பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.  மேலும், தற்போது கோடைகாலம் என்பதால் யானைகளுக்கு ஷவர் குளியல் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், கொரோனா 2வது அலை காரணமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வந்து கண்டுகளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால், வண்டலூர் உயிரியல் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.

இதுகுறித்து பூங்கா நிர்வாகி சதீஷ் கூறுகையில், ‘பண்டிகை காலங்களிலும், கோடை காலங்களிலும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருவது வழக்கம். சாதாரண நேரங்களில் குறைந்தது 30 ஆயிரம் பேர் வருவார்கள். தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் பூங்காவுக்கு ஒரு நாளைக்கு 1,000 பேர் கூட வருவதில்லை. அதிலும், பார்வையாளர்கள் மாஸ்க் அணிந்து இருந்தால் மட்டுமே பூங்காவுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.  மேலும் திருச்சி, சேலம், மதுரை, கன்னியாகுமரி உள்பட தென் மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் பார்வையாளர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது’ என்றார்.

Related Stories: