வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் பெண் புரோக்கர் அதிரடி கைது

புதுச்சேரி, ஏப். 17: புதுச்சேரி ரெயின்போ நகரில் வாடகைக்கு வீடு எடுத்து விபசார தொழில் நடத்திய பெண் புரோக்கரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரி ரெயின்போ நகர் 9வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு கொரோனா 2ம் அலையிலும் வெளிநபர்கள் அடிக்கடி வந்து செல்வதாக பெரியகடை காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டை பெரியகடை எஸ்ஐ சண்முகா சத்யா தலைமையிலான போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு ஆண்கள் மட்டும் வந்து சென்றதால் சந்தேகமடைந்த போலீசார், நேற்று முன்தினம் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விபசாரம் நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 26 வயது மதிக்கத்தக்க பெண்ணை மீட்ட போலீசார், வாடகைக்கு வீடு எடுத்து விபசார தொழிலை நடத்திய புரோக்கரான ரெயின்போ நகர் மாயகிருஷ்ணன் என்ற ரவிச்சந்திரனின் மனைவி சுமதியை (43) கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து 3 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து, சுமதியை கோவிட் பரிசோதனைக்கு அனுப்பினர். ஆய்வக முடிவு வந்ததும் அவரை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தும் போலீசார், அவரை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் விபசார தொழிலுக்கு உடந்தையாக இருந்த சிலரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

Related Stories: