ஆத்தூரில் நீர் ஆதாரம் குறித்து விளக்கம்

சின்னாளபட்டி, ஏப். 14: பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் சச்சின்லயோலா, மகேந்திரன், முத்துக்குமார், பிரவீன்குமார், ரெங்கசாமி, துக்டன்செராப் ஆகியோர் தோட்டக்கலை உதவி இயக்குநர் கணேசன், தோட்டக்கலை கல்லூரி பேராசிரியர் முத்துராமலிங்கம் வழிகாட்டுதலின்படி ஆத்தூர் ஒன்றிய கிராமங்களில் தங்கி விவசாயிகளை சந்தித்து பயிரிடுதல், மண்வளம், நீர் வளம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதன்படி பழைய செம்பட்டியில் உள்ள கருங்குளம், நடுக்குளம், புல்வெட்டி கண்மாய் நீர்நிலைகளை வரைந்து, அவற்றின் மூலம் நெல், தென்னை விவசாயத்திற்கு பாசன நீர் கொண்டு செல்வது குறித்து மாணவர்களுக்கு விவசாயிகள் கோலம் வரைந்து விளக்கி கூறினர். அப்போது விவசாயிகள் பேசுகையில், ‘இயற்கையின் வரப்பிரசாதமாக மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் எங்களது ஊர் அமைந்துள்ளது. இப்பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் காமராஜர் நீர்த்தேக்கம், நடுக்குளம், கருங்குளம், புல்வெட்டி கண்மாய் ஆகிய குளங்களுக்கு வந்தடைகிறது. மழைக்காலங்களில் என்னென்ன பயிர்கள் பயிரிடலாம் என்பதை திட்டமிட்டு செய்து வருவதால், எங்களால் விவசாயத்தில் வெற்றி பெற முடிகிறது’ என்றனர்.

Related Stories: