தூத்துக்குடி, டிச. 4: தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு நபார்டு நிதியில் இருந்து வாங்கப்பட்ட புதிய வாகனத்தை அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.
புரெவி புயலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமை வகித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் உதயகுமார், தொடர்ந்து தாசில்தார்கள், பிடிஓக்களுடன் காணொலி வாயிலாக தொடர்புகொண்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கேட்டறிந்து முக்கிய ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் காயல்பட்டினம், எப்போதும் வென்றான், தென்திருப்பேரை பகுதிகளில் பயன்படுத்துவதற்காக 3 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அமைச்சர் உதயகுமார் துவக்கி வைத்தார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு நபார்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் டெம்போ வாகனத்தை வழங்கியதோடு கூட்டுறவு வங்கியில் கணக்கு துவக்கம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தையும் துவக்கிவைத்தார்.