புதுடெல்லி: தண்டவாளத்தை கடந்தபோது, கடந்த 3 ஆண்டுகளில் ரயில் மோதி சுமார் 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக மக்களவையில் மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோஹைன் தெரிவித்தார். ரயில் மோதி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செல்போன் பேசியபடியும், அவசர அவசரமாகவும் தண்டவாளத்தை கடக்கின்றனர். ரயில் வருவதை கவனிக்காமல் செல்வதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில், தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரயில் மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,790 பேர் என மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோஹைன் நேற்று மக்களவையில் தெரிவித்தார்.
அதிகபட்சமாக வடக்கு ரயில்வே மண்டலத்தில் 7,908 பேரும், தெற்கு ரயில்வேயில் 6,149 பேரும் உயிரிழந்துள்ளனர். விதிமுறைகளை மீறியும், செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடப்பதால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இதை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், விதிமுறை மீறிய 1.73 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!