×

மாங்கனாம்பட்டு பகுதியில் சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகள்

கொள்ளிடம்,மே6: மாங்கனாம்பட்டு பகுதியில் சாையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகளை 4 நாட்களுக்கு ஒரு முறை அள்ளப்படுவதை நிறுத்திவிட்டு, உடனுக்கு உடன் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியில் குறிப்பிட்ட முக்கிய இடங்களில் குவியல் குவியலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதில் மக்கும் மற்றும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளும் நெகிழி உள்ளிட்டவை கொட்டப்பட்டு வருகின்றன. காற்று அதிகமாக வீசும்போது பறந்து சென்று மீண்டும் சாலையில் வந்து விழுகிறது. சுற்றுப்புற சுகாதாரத்தை இது பெரிதும் பாதித்து வருகிறது. ஊராட்சி சார்பில் குப்பைகளை கொட்டுவதற்கு ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு இடம் தேர்வு செய்யப்பட்டு கண்ட, கண்ட இடங்களில் எடுத்துச் சென்று கொட்டப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாத காலமாக குப்பைகளை கொட்டுவதற்கு உரிய இடம் இதுவரை தேர்வு செய்யவில்லை. குப்பைகளை கொட்டுவதற்கு கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான சுமார் 30க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள தைக்கால் கிராமத்தில் ஒதுக்குப்புறத்தில் உள்ளன.

இதில் ஒரு பகுதி நிலத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதனை ஒட்டி குப்பைகளை அரைத்து உரமாக்க பயன்படுத்துவதற்கு கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள இயந்திரம் அடங்கிய கட்டிடப் பகுதியும் உள்ளது. இயந்திரம் பழுதடைந்துள்ளதால் கட்டிடம் மூடியே கிடக்கிறது. பழுதடைந்த இந்த இயந்திரத்தை மீண்டும் பழுது நீக்க முடியாத அளவுக்கு இந்த இயந்திரம் உள்ளதாக கூறப்படுகிறது. குப்பைகளை கொட்டுவதற்கு ஊராட்சிக்கு சொந்தமாக உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அதில் ஒரு பகுதி ஒதுக்கி குப்பைகளை கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்வதற்காக நிலத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. ஆனால் இதுவரையில் அந்தப் பணி முடிவு பெறவில்லை. அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குப்பைகளை கொண்டு சேர்ப்பதற்கு உரிய இடம் இன்றி ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி நிர்வாகம் தவிப்புக்கு உள்ளாகியுள்ளது. சிரமத்துடன் வாகனங்கள் மூலம் குப்பைகள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. எனவே இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் தைக்காலில் ஊராட்சிக்கு சொந்தமான தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உடனடியாக குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post மாங்கனாம்பட்டு பகுதியில் சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகள் appeared first on Dinakaran.

Tags : Manganampattu ,Kollidam ,Manganampatu ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் அருகே கீழமாத்தூர்,...