×

மணிப்பூர், ஹரியானா சம்பவம் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஐக்கிய ஜமாத் பேரவை ஆர்ப்பாட்டம்

 

மேட்டுப்பாளையம், ஆக.5: மணிப்பூர் மற்றும் ஹரியானாவில் நடைபெற்று வரும் கலவரங்களை கண்டித்தும், அதனை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் மேட்டுப்பாளையத்தில் ஐக்கிய ஜமா அத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருப்புப்பட்டை அணிந்து ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி.முகமது ஷெரீப் தலைமையில் நேற்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து பள்ளி நிர்வாகிகள் உலமாப்பெருமக்கள் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஐக்கிய ஜமாத் பேரவை செயலாளர் அக்பர் அலி வரவேற்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநில பாஜ அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களும் எழுப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள் கடந்த 3 மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்தாத ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், இரு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்தும், கடந்த சில தினங்களாக ஹரியானா மாநிலத்தில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை கண்டித்தும் பேசினார்.

மேலும்,ஒன்றிய பாஜ அரசு உடனடியாக மணிப்பூர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நிகழ்ந்து வரும் வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அயூப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முஹம்மது அப்பாஸ், எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் நெளபல், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஜாபர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம், ஜே.ஏ.கியூ.எச்.முஹம்மது அயூப், ஜமாதே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் நிர்வாகி சுஹைல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.ஐக்கிய ஜமாத் பேரவை துணைத்தலைவர் ஹாஜி முஹம்மது நன்றி கூறினார்.

The post மணிப்பூர், ஹரியானா சம்பவம் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஐக்கிய ஜமாத் பேரவை ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Haryana Incident United ,Jamaat Assembly ,Union BJP government ,Mettupalayam ,Haryana ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் முதல்வர் ராஜினாமாவா? ஊடக...